“நிறைய பேரின் மனதில் ‘இவர்கள் புதிதுதானே, என்ன தெரியும்?’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் புதிதல்ல. கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.
இன்று கிடைத்துள்ள அடையாளம்தான் எனக்குப் புதிது. ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்து வருகிறேன். மக்களின் பிரதிநிதியாகவும், சமூக சேவகராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
ரசிகர் மன்றம் தொடங்கி பல்வேறு நிலைகளில் மக்கள் பணிகளைச் செய்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்ததன் மூலம்தான் இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். எனவே, எதுவும் தெரியாதவர்கள் என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம். இந்தத் துறைக்குத்தான் நாங்கள் புதிது; அனுபவத்திற்கு அல்ல.
ஏற்கனவே மக்களின் தேவைகளுக்காகப் போராடி, அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களைப் பெற்றுத் தந்த அனுபவம் எங்களுக்கு உள்ளது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
மேலும், நம்முடைய ஆட்சியை கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. மற்ற ஆட்சிகளை குறை சொல்லவோ, விமர்சிக்கவோ நாங்கள் வரவில்லை. ஆனால், நம்முடைய ஆட்சி முற்றிலும் மக்களுக்கான ஆட்சி. மக்களுக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம்.
நம்மிடையே எந்தவித வேற்றுமையும் இருக்கக் கூடாது. சிலர் தூண்டுதலின் பேரில் செயல்படலாம். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும், யாருடைய கட்டுப்பாட்டிலும் அடங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் நீங்களாகவே மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்பதையே கேட்டுக்கொள்கிறேன். உள்நோக்கத்துடன் தொந்தரவு செய்வதோ, மக்கள் பணிகளை செய்யவிடாமல் தடுப்பதோ போன்ற செயல்கள் நடைபெற்றால், அதற்கான உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
அதுபோன்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்த விரும்பவில்லை.
எனவே, இன்றிலிருந்து மக்களுக்கான ஆட்சியில், மக்களுக்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். உங்கள் சேவை அனைத்தும் மக்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
