சென்னை தலைமைச் செயலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக பிரபல பின்னணிப் பாடகியும், குணச்சித்திர நடிகையுமான டி.கே. கலா இன்று நேரில் வருகை தந்தார்.
தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகியாக தனது பயணத்தைத் தொடங்கிய டி.கே. கலா, பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் தனது முத்திரையைப் பதித்தார். குறிப்பாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘வேலு’ திரைப்படத்தில் சூர்யாவின் பாசமிகு தாயாக நடித்ததன் மூலம், ‘வேலு அம்மா’ என்ற பெயரில் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும், ‘கில்லி’, ‘தம்பி’, ‘குருவி’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த டி.கே. கலா, தனது கோரிக்கை மனுவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்க்கைச் சூழ்நிலையையும், முதலமைச்சருடனான நீண்டகால குடும்ப நட்பையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நான் ஒரு முதலமைச்சரைப் பார்க்க வரவில்லை; என் தம்பியைப் பார்க்கத்தான் வந்தேன். அவர்களது குடும்பத்துடன் எங்களுக்கு நீண்டகால நட்பு உள்ளது. சிறுவயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.
அவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று, நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி நடத்தி வருகிறார். அதை மக்கள் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் தலைமைச் செயலகத்திற்கு வந்தேன்” என்றார்.
“பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…
மேலும், தனது தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசினார்.
“சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளேன். பல திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தற்போது எனக்கு முறையான பட வாய்ப்புகள் இல்லை. வயது முதிர்ந்த இந்தக் காலத்தில் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, அரசுத் தரப்பில் எனக்கு தேவையான உதவிகளும், கலைத்துறைக்கான ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
டி.கே. கலா, தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பழம்பெரும் நகைச்சுவை நடிகை சண்முகசுந்தரியின் மகள் ஆவார். வெறும் 12 வயதிலேயே பின்னணிப் பாடகியாக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய அவர், ஏராளமான பக்திப் பாடல்கள் மற்றும் பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார்.
“பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்தியா?! சிவகங்கை பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!”
குறிப்பாக, ‘அகத்தியர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “தாயிற் சிறந்த கோயிலுமில்லை…” என்ற காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் டி.கே. கலாதான். தனது தனித்துவமான குரலால் அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அண்மையில் அளித்திருந்த ஒரு நேர்காணலில், தனது ஆரம்ப கால திரையுலக அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், “நான் பாடகியாக அறிமுகமானபோது, ‘சின்னப் பெண், இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும்?’ என்று பலர் எதிர்த்தார்கள்.
நான் காலடி எடுத்து வைத்த இடமெல்லாம் கண்ணிவெடிகள் நிரம்பியிருந்தது போல சவால்கள் இருந்தன. பல போராட்டங்களையும் அவமானங்களையும் கடந்து தான் இன்று இந்த இடத்தை அடைந்தேன்” என்று மனம் திறந்து பேசியிருந்தார்.
பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்திய டி.கே. கலா, ‘வேலு’, ‘கில்லி’, ‘தம்பி’, ‘குருவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘எதிர்நீச்சல்’ மெகா தொடரில் ‘அப்பத்தா’, அதாவது ஜனனியின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.
முதலமைச்சரிடம் தனது மனுவை அளித்த பிறகு, அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் டி.கே. கலா தெரிவித்தார்.
வயது முதிர்ந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல், வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ள மூத்த கலைஞர் டி.கே. கலாவின் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
