திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் மர்ம நபர் ஒருவர் கிரிஜா என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தங்கத் தாலியை பறித்தும்,
தொடர்ந்து விஜயகுமார் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி அணிந்திருந்த வெள்ளிச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலியாஸ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், வீட்டின் கதவை உடைக்க முயற்சித்துள்ளான். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள செவிலியர் சுமிதா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரது கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் செயினை பறிக்க முயன்ற போது சுமிதா சத்தமிட்டு கூச்சலிட்டதால் அதிர்ச்சியடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து தங்கத் தாலி மற்றும் வெள்ளிச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பெரியாங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
