சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கையோடு, தமிழ்நாட்டின் அடிமட்ட அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கான ‘ஆபரேஷன் லோக்கல் பாடி’ திட்டத்தை முதல்வர் விஜய் கையில் எடுத்துள்ளார்.
“சட்டமன்றத் தேர்தலைப் போலவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு வார்டிலோ, நகராட்சியிலோ தவெக கூட்டணி ‘மைனாரிட்டி’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது” என்பது முதலமைச்சர் விஜய்யின் கண்டிப்பான உத்தரவு. இதற்காக, திமுக கூட்டணியை அடியோடு சிதைக்கும் நோக்கில் தவெக வகுத்துள்ள மாஸ்டர் பிளான் தான் தற்போது கோட்டை வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
விசிக-விற்கு தவெக கொடுத்த ‘பம்பர் ஆஃபர்’
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளாட்சித் தேர்தலின் போது தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் கடும் அதிருப்தியில் இருந்தது. அன்று திமுக செய்தது என்ன? விசிக தரப்பில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் சேர்த்து 1 மேயர், 9 துணை மேயர் பதவிகள் கேட்கப்பட்டன. ஆனால், திமுக தலைமை அவர்களுக்குக் வெறும் கடலூர் துணை மேயர் பதவியை மட்டுமே கொடுத்து சமாதானப்படுத்தியது. இது விசிக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
விஜய் கொடுக்கும் ‘சர்ப்ரைஸ்’
திமுகவின் இந்த பழைய ‘அரசியல் கணக்கை’ சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள தவெக தலைமை, விசிக-விற்கு அவர்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆஃபர் ஒன்றை முன்வைத்துள்ளது. திமுகவை வீழ்த்தும் ஒரே நோக்கில், முதல்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே 2 மேயர் பதவிகளை விசிக-விற்கு ஒதுக்க தவெக முன்வந்துள்ளது.
விஜய்யின் ‘அள்ளிக் கொடுக்கும்’ வியூகம்
கூட்டணிக் கட்சிகள் கேட்பதை விட ஒரு படி அதிகமாகக் கொடுத்து, தவெக கூட்டணியை எஃகுக் கோட்டையாக மாற்றுவதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் முழுமையான களப்பணியை உள்ளாட்சியில் அறுவடை செய்ய முடியும் என தவெக கணக்குப்போடுகிறது.
ஒட்டுமொத்த மாநகராட்சிகளுக்கும் ‘ஸ்கெட்ச்’!
உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநகராட்சிகளையும், பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் தவெக கூட்டணியே முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.
இதற்காக, தவெக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடன் (காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக) தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. திமுகவின் வாக்கு வங்கியை அடிமட்ட அளவில் காலி செய்ய வேண்டும் என்றால், கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவது தான் முதல் வேலை என்பதை விஜய் மிகச் சரியாகச் செய்துள்ளார்.
அறிவாலய வட்டாரத்தில் கலக்கம்
விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தவெக அள்ளிக் கொடுக்கும் இந்த விபரம் கசிந்ததில் இருந்தே, திமுக தலைமை கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தால், தங்களின் கோட்டைகளாகக் கருதப்படும் பல மாநகராட்சிகள் தவெக வசம் சென்றுவிடும் என்பதை திமுக உணர்ந்துள்ளது.
“கேட்பதை விட அதிகமாகக் கொடுக்கும்” விஜய்யின் தாராள அரசியல் வியூகம், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மிகப்பெரிய அலைகளை உருவாக்கப் போவது உறுதி என்கிறார்கள்.
