தேர்தல் வெற்றிக்குப் பின் பனையூரில் நடைபெற்ற தவெக முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கொண்டாட்டத்திற்குப் பதிலாக பெரும் கொந்தளிப்போடு முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்றதால தங்களுக்குப் பாராட்டு கிடைக்கும் என ஆவலோடு வந்த மா.செ-க்களுக்கு, தலைமை கொடுத்த அடுத்தடுத்த ‘ஷாக்’குகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
“234 தொகுதிகளுக்கும் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதனால் உங்கள் அதிகாரம் குறையலாம். மாற்றுக் கட்சியினருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதால், தற்போது இருக்கும் சிலருக்குப் பதவியே இல்லாமல் போகலாம்” என தலைமை அடுத்தடுத்து வெடிகளைக் கொளுத்திப் போட, கூட்ட அரங்கம் அப்படியே உறைந்துபோனது.
இதனால் பொறுமையிழந்த மா.செ-க்கள் குமுறத் தொடங்க, கூட்டத்தில் ரகளை வெடிக்கும் சூழல் உருவானது. நிலைமை கைமீறுவதை உணர்ந்த தலைமை, அவசர அவசரமாகக் கூட்டத்தை முடித்து வைத்தது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைத் தோற்கடித்த த.வெ.க எம்.எல்.ஏ விஜயகுமார் (எ) நவல்பட்டு விஜி, கட்சியின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே எகிறியுள்ளார். “அதிகாரிகளும் எங்களை மதிக்க மாட்டேங்குறாங்க, கட்சி நிர்வாகிகளும் மதிக்க மாட்டேங்குறாங்க. அவங்களைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க” என விஜி கொதிக்க… அதற்கு ஆதவ் அர்ஜுனாவோ, “நீங்கல்லாம் நேத்து வந்தவங்க. உங்களுக்கு சீட் கொடுத்து ஜெயிக்க வச்சதே பெருசு, அமைதியா உட்காருங்க!” என முகத்தில் அடித்தாற்போல் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ‘நோஸ்கட்’ விவகாரத்தால் மக்கள் இயக்கக் காலத்து பழைய புள்ளிகளும், புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் உள்ளனர். “இனி வரப்போகும் மாவட்டப் பிரிப்பில் பனையூரில் இதைவிடப் பெரிய அணுகுண்டே வெடிக்கும்” என த.வெ.க தங்களுக்குள் கவலையோடு கிசுகிசுத்து வருகின்றனர். வெற்றிக் களிப்பில் இருக்க வேண்டிய கட்சிக்குள், தற்போதே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
