https://republictn.com/

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக கழகம் 108 இடங்கள் பெற்று பெரும்பான்மை பெற்றது. இதன் காரணமாக அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சிகளில் இருந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.

கட்சியில் இணையும் பெரும்பாலோர் தனக்கு கட்சியில் பொறுப்பு கிடைக்கும் என்ற நோக்கிலும், மேலும், விரைவில் நடைபெற உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைகின்றனர். இதனால், ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கும், தற்போது புதிய இணைந்தவர்களுக்கு வழங்கப்படும் பதவிகளால் புதிய, பழைய நிர்வாகிகளுக்கும் இடையே தமிழகம் முழுவதும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தில் உள்ள நிர்வாகிகள் ஒரு சிலர் கரிகாலன் அணி என்றும் ஒரு சிலர் மற்ற நிர்வாகிகளை சுட்டிக்காட்டி பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வேதாத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலு, இவருடைய மனைவி பவானி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் நிர்மல், சதீஷ், செளகத், சுதாகர், கோபி மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர்கள் என மொத்தம் 7பேர்கள் , நேற்று இரவு பாலு வீட்டிற்கு மது போதையில் சென்று பாலுவின் மனைவி பவானியிடம் தகாத வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பாலு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியினை பதிவு செய்து கோட்டை காவல் நிலையத்தில் தனது மனைவி பவானியுடன் கொலை மிரட்டல் விட்ட 7 பேரும் மீது புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தவெக நிர்வாகி பாலு, ”நான் அரசியலில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்து.. திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கரிகாலன் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக நிர்வாகி நிர்மல், சதீஷ், செளகத் ஆகியோர் ஏற்கனவே என்னிடம் தொலைபேசி மூலமாக பேசி கட்சியில் சீனியர் நாங்கள் எங்களின் மதிக்காமல் நீ பணியாற்றி வருகிறாய் என்று மிரட்டினார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் எனது பணியை செய்து வந்தேன். இந்நிலையில் நேற்று இரவு எனது வீட்டில் மனைவி பவானி தனியாக இருக்கும்போது, மது போதையில் சென்று தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இவற்றை கண்டித்து இன்று கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இதுபோன்று சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க தலைமை கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

பாதிக்கப்பட்ட பவானி கூறுகையில், ”நான் தனியாக வீட்டில் இருக்கும்போது ஏழு நபர்கள் மது போதையில் வந்து என்னையும் என் கணவரையும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை விடுத்து சென்றனர். அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்தார்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார்கள். ஆகையால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தவெக நிர்வாகியின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த செய்தி கேள்விப்பட்ட கட்சியினர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

-ஜான் கண்ணா- சிறப்பு நிருபர், திருச்சி

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 minutes ago at 53 minutes ago