https://republictn.com/

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்கவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” என்று ஒரு காலத்தில் கர்வத்தோடு முழங்கிய டிடிவி தினகரன், இன்று “காலமும் சூழ்நிலையும்தான் அதை முடிவு செய்யும்” என்று மென்மையாக இறங்கி வந்திருப்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் ஆகப்பெரும் விநோத ட்விஸ்ட்.

அமமுகவை அதிமுகவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்ற அழுத்தம் டிடிவி தினகரனைச் சுற்றி இருக்கும் சீனியர் தலைவர்கள் மத்தியில் இருந்து தற்போது எழத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த இணைப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சைக் கொடி காட்டுவாரா என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.

அமமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் கலக்கமே இந்தத் திடீர் இணைப்புப் பேச்சுக்குக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

“எப்படியும் ஒரு நாள் அதிமுகவை நாம் கைப்பற்றி விடலாம், நமக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்” என்ற நம்பிக்கையில் இத்தனை நாட்களாகத் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வந்த அமமுக நிர்வாகிகள், இப்போது ஒட்டுமொத்தமாகத் தங்களது நிதிப் பொட்டிகளை மூடிவிட்டார்களாம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மடைமாற்றத்தில், பிரதான எதிர்க்கட்சி நாற்காலியைத் தக்க வைக்கவே அதிமுக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமமுக என்ற தனி அமைப்பைத் தொடர்ந்து நடத்துவது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்தே, “கட்சியை அதிமுகவோடு இணைத்துவிடுங்கள்” என்று தினகரனுக்குச் சீனியர்கள் கடுமையான குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

செய்தியாளர்கள் முன்னிலையில் அண்மைய காலம் வரை எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், இப்போது தன் தொனியை முழுமையாக மாற்றியுள்ளார். கூட்டணி, இணைப்பு என்ற கேள்விகள் எழும்போதெல்லாம் எகிறி அடித்த தினகரன், தற்போது “காலமும் சூழ்நிலையும்தான் அதை முடிவு செய்யும்” என்று பவ்யமாகப் பதில் சொல்லியிருப்பது, அவர் சீனியர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, அதிமுகவோடு இணையத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதவை அடைக்கும் எடப்பாடி
தினகரன் தரப்பு இறங்கி வந்து தூது விட்டாலும், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் அசைக்க முடியாத பிடிவாதத்துடன் காய் நகர்த்தி வருகிறார். அமமுகவை முழுமையாக அதிமுகவுக்குள் இணைப்பதற்கோ, தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கோ இபிஎஸ்-க்கு எள்ளளவும் சம்மதம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

“வேண்டுமானால் கூட்டணியில் இருக்கட்டும். அவர் அந்தத் தனித் தம்பட்டத்தைக் கூட்டிக் கொண்டு நமக்குத் துணையாக வரட்டும். அதை விடுத்து, மீண்டும் அவர்களைக் கட்சிக்குள் சேர்த்து, இன்னொரு பவர் சென்டரை உருவாக்க நான் தயாராக இல்லை!” என்று கறாராக நெருங்கிய நிர்வாகிகளிடம் இபிஎஸ் தனது நிலைப்பாட்டை ஓப்பனாகவே உடைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago