அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வரிசையாகத் தவெக-வை நோக்கிச் செல்வதால், அதிமுகவை தவெக விழுங்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தவெக-வின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஆரம்பகால விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் இதற்கு நேர்மாறான ஒரு குமுறல் எழுந்துள்ளது. “அதிமுகவை தவெக விழுங்கவில்லை. தவெக-வைத்தான் அதிமுகவில் இருந்து வருபவர்கள் விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்” என்பதே அவர்களின் தற்போதைய வாதமாக உள்ளது.
இதற்குச் சான்றாக அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பின்னர் அவரும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்யை நேரடியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது விஜய், அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் கட்சியில் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அதிகார மோதல்
ஜூலை 5-ஆம் தேதி மாலை, சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருச்சி வழியாகத் தனது முன்னாள் தொகுதியான விராலிமலைக்கு வந்த விஜயபாஸ்கர், அங்கு ஓபன் ஜீப்பில் ஊர்வலம் நடத்தினார். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தவெக மாவட்ட அலுவலகத்திற்கு வருவதாக தற்போதைய அமைச்சரும், அரந்தாங்கி எம்.எல்.ஏ-வுமான பர்வேஸிடம் முன்கூட்டியே தெரிவித்தார்.
மாலை 5:30 மணிக்கே பர்வேஸ் அலுவலகம் வந்து காத்திருந்த நிலையில், விஜயபாஸ்கர் சுமார் 500 முதல் 1000-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் இரவு 7:15 மணிக்கு மேல் அங்கு வந்து சேர்ந்தார். ஒரு சாதாரண அளவிலான அந்த அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக முன்னாள் தொண்டர்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிந்து வந்திருந்தனர். இன்னும் தவெக கரைவேட்டி வாங்கவில்லை. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் பெயர்கள் அனைத்தும் அத்துப்படி என்பதால், ஒவ்வொரு ஒன்றிய, நகரச் செயலாளர்களையும் பர்வேஸிடம் பிரத்தியேகமாக அறிமுகம் செய்து வைத்தார். இந்த சால்வை மற்றும் துண்டு அணிவிக்கும் படலம் இரவு 9:30 மணி வரை நீண்டது.
கமேனி இறுதிச்சடங்கில் இந்தியா..! இதை மறக்கவே மாட்டோம்..! உருகி உருகி நன்றி சொன்ன ஈரான் தூதரகம்..!
பழைய நிர்வாகிகளின் அச்சம்
வெளியே பர்வேஸும், விஜயபாஸ்கரும் “அன்பு மாப்பிள்ளை”, “அன்பு மாமா” என்று பாசமழை பொழிந்து கொண்டாலும், பர்வேஸ் தரப்பு கடும் அதிருப்தியிலும், பயத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் கட்சியில் இணைவதற்கு முதல் நாள் இரவே சென்னையில் பர்வேஸைச் சந்தித்து, தம்மோடு வருபவர்களுக்கு தவெக-வில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்துள்ளார்.

இதனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயை மட்டுமே நம்பி மக்கள் இயக்கத்தில் உழைத்த பழைய தவெக நிர்வாகிகளுக்குப் பதவிகள் பறிபோகுமா, அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் யாருக்கு முன்னுரிமை என்ற பதற்றம் புதுக்கோட்டையில் நிலவுகிறது. இதேபோன்றதொரு நிலை கடலூர் மாவட்டத்திலும் நிலவுகிறது அங்கு தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், தனது ஆதரவாளர்களுக்குப் பதவி கோரி நேரடியாகப் புஸ்ஸி ஆனந்திடமே பட்டியல் கொடுத்துள்ளார்.
தடுமாறும் தவெக-வின் அடித்தளம்
வெளியே பார்க்கும்போது அதிமுகவின் கோட்டையை விஜய் தகர்ப்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் தவெக-வின் அடித்தளத்தையே அதிமுகவின் சீனியர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதே தற்போதைய நிதர்சனம். 20 வருடங்களாகக் கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டிய ரத்தத்தின் ரத்தங்களான மக்கள் இயக்கத் தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, நேற்று வந்தவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தால் அது கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். தொண்டர்களின் இந்த அடிமனத்துக் குமுறலையும், சீனியர்களின் பதவிப் பட்டியலையும் முதலமைச்சர் விஜய் எப்படிச் சமாளிக்கப் போகிறார்? ‘அரசியல் ஜாம்பவான்களை’ விழுங்கி தவெக வளரப் போகிறதா அல்லது வந்தவர்கள் தவெக-வை விழுங்கப் போகிறார்களா? என்பதற்கான விடை, வரவிருக்கும் உட்கட்சிப் பதவி அறிவிப்புகளில் தெரிந்துவிடும்.

[…] இதையும் படியுங்க:- தலைகீழ் ட்விஸ்ட்… தவெக-வை விழுங்கும்… […]