https://republictn.com/

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த கையோடு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அடுத்தடுத்த சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பதுரை முன்வைத்துள்ள ஒரு வரலாற்று ஒப்பீடு, அரசியல் களத்தில் தீயாய் பரவி வருகிறது. “1993-ல் நரசிம்மராவ் அரசுக்கு நேர்ந்த கதிதான், குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியுள்ள விஜய்க்கும் ஏற்படும்” என்கிற அவரது எச்சரிக்கை, த.வெ.க கூடாரத்தை அதிர வைத்துள்ளது.

அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் தத்தளித்தது. 1993 ஜூலை 28 அன்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 5 எம்பிக்களின் ஆதரவை நரசிம்மராவ் நாடினார். தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க அந்த எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

தீர்மானம் தோல்வியுற்று நரசிம்மராவ் அரசு தப்பித்தாலும், 1996-ல் சிபிஐ இந்த ஊழலை அம்பலப்படுத்தியது. பிரதமர் நரசிம்மராவ், பூட்டா சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் பிரதமர் என்ற கறையை நரசிம்மராவ் மீது படிந்தது. பின்னர் அவர் மேல்முறையீட்டில் விடுதலையானது வேறு கதை.

அதிமுக எம்பி இன்பதுரை முன்வைக்கும் வாதம் மிகத் தெளிவானது. ”நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது” என அதிமுக எம்.பி-யும் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதரவு பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது ஆதாயம் அளிக்கப்பட்டிருந்தால் சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரிக்கிறார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. நரசிம்மராவ் காலத்தில் ‘ஜே.எம்.எம்’ எப்படி ஒரு கறையாக அமைந்ததோ, அதேபோல தற்போதைய ‘ஆதரவு அரசியல்’ விஜய்க்கு ஒரு பெரும் சட்டப் போராட்டத்தைத் தொடங்கி வைக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago