தமிழக அரசியல் களம் தற்போது மற்றுமொரு சதுரங்க வேட்டையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தவெக ஆளுங்கட்சியாக அரியணை ஏறிய குறுகிய காலத்திலேயே, வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் கோட்டை முதல் அறிவாலயம் வரை உச்சகட்ட திரைமறைவு பேரங்களையும், மிரட்டல் அரசியலையும் கிளப்பிவிட்டுள்ளது. தவெக, திமுக, அதிமுக என முக்கோணப் போட்டி நிலவும் இந்த அரசியல் ஆட்டத்தில் அரங்கேறும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜய்யை மிரட்டும் திருமா
தவெக அரசில் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தற்போது முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறார்.
திருமாவின் ‘மெகா’ டிமாண்ட்ஸ்
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் விசிக சார்பில் நான்தான் போட்டியிடுவேன் என்று ஆதவ் அர்ஜுனா மூலமாக பிடிவாதமாக காய்களை நகர்த்துகிறார் திருமா. விசிகவுக்கு தவெக அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘பவர்ஃபுல்’ இலாக்காக்களை ஒதுக்க வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 3 மேயர் சீட்டுகள், அரசு வாரிய பதவிகளில் 4 இடங்கள், மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகளில் விசிகவுக்கு 5% இடஒதுக்கீடு வேண்டும் என விஜய்யிடம் செக் வைத்துள்ளார்.
மறைமுக மிரட்டல்
திருமாவின் இந்த அதிரடி டிமாண்டுகளை முதல்வர் விஜய்யும் அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்களும் ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் கடுப்பான திருமா, “நாங்கள் அமைச்சரவையில் இருக்கிறோமே தவிர, தவெக கூட்டணியில் தொடர்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று பேசி ஆதரவை வாபஸ் வாங்குவது போன்ற மறைமுக மிரட்டலை விடுத்து வருகிறார். இது தவெக ஆட்சியின் ஆயுளுக்கே ஆபத்தாக முடியுமோ என்ற விவாதம் தீயாய் பரவுகிறது.
திருமாவைச் சமாளிக்க பாமக-வுக்கு வலை
விசிகவின் இந்த மிரட்டல் தோணியை அடக்க, தவெக தரப்பு மாற்று ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் நெருங்கிய நண்பரும், முதல்வர் விஜய்யின் முக்கிய ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமி, பாமகவின் ஆதரவைப் பெறுவதற்கான திரைமறைவு வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், இதற்கு விசிகவின் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கட்டை போட்டு வருவதால் தவெக-வுக்குள் உட்கட்சி அரசியல் புகைச்சல் அதிகரித்துள்ளது.
மறுபுறம், அண்மையில் தவெக-வில் இணைந்த திருச்சி அதிமுக விஐபிகள் திருச்சி கிழக்கு சீட்டுக்காக முட்டி மோதி வருகின்றனர். ஆனால், புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான தவெக சீனியர்கள், “கட்சித் தாவியவர்களுக்கோ அல்லது கூட்டணி கட்சிகளுக்கோ சீட் கொடுத்தால் சொந்த தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். எனவே ஆரம்ப கால தவெக விசுவாசி ஒருவருக்கே சீட் தர வேண்டும்” என்று விஜய்யிடம் பிடிவாதமாக வலியுறுத்தி வருகின்றனர்.
