ஆளுங்கட்சியில் தான் நாற்காலி சண்டை என்றால், ஆண்ட கட்சியான திமுகவிலும் சீட்டு பஞ்சாயத்து கொழுந்துவிட்டு எரிகிறது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியை மையமாக வைத்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஒரு தனிநபர் அரசியல் போரைத் தொடங்கியுள்ளார்.
நேருவின் ‘ஸ்கெட்ச்’ என்ன?
திருச்சி மாவட்டத்தில் தனக்கு அரசியல் எதிரியாக உருவெடுத்து வரும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இந்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் நேரு மிகத் தீவிரமாக இருக்கிறார். அன்பில் மகேஷை ஓரங்கட்ட வேண்டுமானால், மு.க. ஸ்டாலினைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை நேரு நன்கறிவார்.
எனவே, எப்படியாவது மு.க. ஸ்டாலினை திருச்சி கிழக்கில் போட்டியிட வைத்து மீண்டும் சட்டமன்றத்திற்குள் அழைத்து வர வேண்டும் என்று துர்கா ஸ்டாலினிடமே நேரடியாகப் பேசி பகடைக்காய்களை நகர்த்தி வருகிறார் நேரு. விஜய்யின் “அப்பாவைக் காணோம்” என்ற விமர்சனத்தை நேரு தனது மாவட்ட அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.
மௌனம் காக்கும் எடப்பாடி
இந்த அதிரடி குழப்பங்களுக்கு மத்தியில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் மௌனம் காத்து வருகின்றனர். வேட்பாளர் தேர்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தாத எடப்பாடி, தவெக, திமுக கூட்டணிக்குள் நடக்கும் குடுமிப்பிடி சண்டையைத் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தவெக, திமுகவின் நிலவரத்தைக் கணித்து, பலமான வேட்பாளரை நிறுத்தலாமா? அல்லது தேர்தலையே புறக்கணிக்கலாமா? புறக்கணித்தால் அது யாருக்கு லாபமாக அமையும்? என்ற இரட்டை கணக்கோடு எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.
அதிகாரப் பசி, கூட்டணி மிரட்டல்கள், மாவட்ட அளவிலான உட்கட்சிப் பூசல்கள் என திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. நேருவின் அரசியல் கணக்கில் ஸ்டாலின் வீழப்போகிறாரா? என்பதைத் தீர்மானிக்கப் போகும் இந்த இடைத்தேர்தல், தமிழக அரசியலின் அடுத்தகட்ட போக்கை மாற்றியமைக்குமா?
