தமிழக அரசியல் என்றாலே “டாஸ்மாக்” மற்றும் அதனைச் சுற்றி நடக்கும் முறைகேடுகள் தான் எப்போதும் பிரதான பேசுபொருளாக இருக்கும். கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் என்பது வெறும் அரசு நிறுவனம் அல்ல; அது சில அரசியல் புள்ளிகளின் “கமிஷன் சுரங்கமாக” வலம் வந்தது என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசு, இந்த கமிஷன் மாஃபியாவின் வேர்களை அறுத்தெறியும் வகையில் ஒரு அதிரடி ‘டாஸ்மாக் ஆபரேஷனை’ கையில் எடுத்துள்ளது.
பா ர்ட்டி ஃபண்ட் டூ அரசு கஜானா
கடந்த ஆட்சிகளில் டாஸ்மாக் விற்பனையின் மூலம் கிடைத்த பெரும் தொகையின் ஒரு பகுதி “பார்ட்டி ஃபண்டாக” (கட்சி நிதியாக) சில தனிநபர்களின் பைகளுக்குச் சென்றது என்பது ஓபன் ரகசியம். இதனை அண்மையில் சட்டமன்றத்திலேயே போட்டு உடைத்த முதல்வர் விஜய். “முன்பு பார்ட்டி ஃபண்டாகப் போன பெரும் தொகை, இப்போது நேராக அரசு கஜானாவுக்கு வரத் துவங்கி இருக்கிறது” என்று அதிரடியாக முழங்கினார். இதுவே முந்தைய ஆட்சியாளர்களுக்கு விழுந்த முதல் காரசாரமான சாட்டையடி.
கொள்ளை போன ரூ. 1500 கோடி
கடந்த காலங்களில் டாஸ்மாக் கொள்முதலில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலமாகியுள்ளது. தமிழக மதுப்பிரியர்களின் விருப்பம் என்ன, எந்த பிராண்டுகளுக்கு டிமாண்ட் இருக்கிறது என்ற எந்தவொரு அடிப்படை கணக்கெடுப்பும் இல்லாமல், ஆளும் தரப்புக்கு வேண்டப்பட்ட மதுபான ஆலைகளிடம் இருந்து “பெரிய தொகையை கமிஷனாக” பெற்றுக் கொண்டு, டன் கணக்கில் தேவையற்ற மதுபானங்களை அரசு கொள்முதல் செய்து குடோன்களில் முடக்கியது.
ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வீணடிப்பு
குடிமக்களுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, கமிஷன் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆண்டுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேவையில்லாத மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அரசுப் பணம் பாழாக்கப்பட்டது.
முதலமைச்சரின் அதிரடி ‘செக்மேட்’
இந்த 1,500 கோடி ரூபாய் மக்கள் பணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த, முதலமைச்சர் விஜய் தற்போது புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபானங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் உண்மையான டிமாண்ட் இருக்கிறதோ, அதை மட்டுமே கணக்கெடுத்து வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் சரக்குகளைக் குவித்து அரசுப் பணத்தை முடக்கக் கூடாது என கறாராகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பைசா கூட கமிஷன் இல்லை
அனைத்து மதுபான ஆலை நிர்வாகங்களையும் நேரடியாக அழைத்துப் பேசிய டாஸ்மாக் நிர்வாகம், “மதுபானங்களின் தரத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவைப்படும்போது நாங்களே ஆர்டர் தருவோம். அரசுக்கோ அல்லது இடையில் இருக்கும் யாருக்குமோ எங்கும் ஒரு பைசா கூட கமிஷன் கொடுக்க வேண்டாம்” என்று முகத்திற்கு நேராக எச்சரித்துள்ளது.
அரசியல்வாதிகளின் கல்லா கட்டும் கூடாரமாக இருந்த டாஸ்மாக் நிர்வாகத்தை, தற்போதைய அரசு தனது கடுமையான கட்டுப்பாடுகளால் சீரமைக்கத் தொடங்கியுள்ளது. கமிஷன் ஏஜெண்டுகளையும், ஆலை அதிபர்களுடன் கூட்டுச் சேர்ந்து மக்கள் பணத்தைச் சுரண்டிய இடைத்தரகர்களையும் இந்த ‘ஆபரேஷன்’ அலற விட்டுள்ளது. ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வீணாவதைத் தடுத்து நிறுத்தியுள்ள இந்த நடவடிக்கை, புதிய அரசின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாகவும், கடந்த கால “கமிஷன் மாஃபியாவுக்கு” விழுந்த மரண அடியாகவும் பார்க்கப்படுகிறது.
