தமிழ்நாடு கவர்னராக ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரில் ஒருவரை பாஜக அரசு நியமிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு கவர்னராக இருந்த ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நிரந்தர கவர்னரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியின் பெயர் தமிழ்நாடு கவர்னர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரண் குமார் ரெட்டி
நல்லாரி கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக அரசியலில் வளர்ந்த இவர், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகராகவும், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு கிரண் குமார் ரெட்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக, அவர் அக்கட்சியில் இருந்தும் விலகினார்.
தொடர்ந்து, ‘ஜெய் சமக்யாந்திரா கட்சி’ எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் 2023-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜாம்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அரசியலில் இருந்து விலகியிருந்த கிரண் குமார் ரெட்டி, 2023-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
கிரண் குமார் ரெட்டியை தமிழ்நாடு கவர்னராக நியமிப்பது தொடர்பான தகவல்களின் பின்னணியில் விஜயின் அரசியல் கணக்குகளும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதல்வர் விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி. விஷ்ணு ரெட்டியின் உறவினர்தான் இந்த கிரண் குமார் ரெட்டி. இவரை நியமித்தால், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பா.ஜ.கவின் வளர்ச்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கொண்டு வருவதற்கும் கிரண் குமார் ரெட்டி உதவிபுரிவார். இதனால், அவர் பெயர் பரிசீலனையில் இருக்கிறது என்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த்
கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததால் ஏற்பட்ட சூழலை சாதகமாக்க ரஜினியை அரசியலில் இறக்க பாஜக முடிவு செய்தது. அதற்காக, தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் ரஜினியை கூற வைத்து, அரசியல் களம் சூடு பிடித்தது. பிறகு, அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியவர்.

சமீபத்தில் பிரதமர் மோடியை ரஜினி சந்தித்துப் பேசியதால், மீண்டும் டீம் லைனுக்கு வந்திருக்கிறார். அதாவது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினியை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜக பலே திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற ஏதாவது ஒரு மாநிலத்தில் ரஜினியை ஆளுநராக நியமித்துவிட்டால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவு பாஜக பக்கம் திரும்பிவிடும் என்பதோடு, தமிழக மக்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க முடியும் என்று மோடி மற்றும் பாஜக மேல்மட்டத் தலைவர்கள் கணக்குப் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுவரை ஆளுநர் நியமனத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
