கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் மற்றும் பல்வேறு எலும்பு முறிவுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று சிறை வார்டன்கள் மற்றும் எட்டு சக கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜூலை 13-ஆம் தேதி சிறையிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையும் படியுங்: யம்மாடி ஆத்தாடி… கழுத்தில் 3 கிலோ தங்கம்..! துரைமுருகன் பினாமியா..? யார் இந்த ‘நடமாடும் நகைக்கடை..? #Republic Tamil
ஆரம்பத்தில், அவரது மரணம் மாரடைப்பு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால், மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நெஞ்சு, தலை, கால்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட வலது கை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 19 காயங்களும் பல இடங்களில் எலும்பு முறிவுகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முதலில் “சந்தேக மரணம்” என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 103-ன் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், நாகர்கோவில் கிளைச் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படியுங்க: “அவருக்காக மட்டும்தான் வந்தேன்!” – கோவில்பட்டியில் லெஜெண்ட் சரவணன் கொடுத்த மாஸ் என்ட்ரி! திக்குமுக்காடிய தூத்துக்குடி!
அதேபோல், சிறைக்குள் சபரி வர்மனை தாக்கியதாகக் கூறப்படும் விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட எட்டு சக கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் வெளியான தகவலின்படி, ஜூலை 12-ஆம் தேதி நள்ளிரவு, சிறை அறைக்குள் சபரி வர்மன் சத்தம் போட்டதாகக் கூறி, அவருக்கும் சில கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தகராறின் போது, சிறை வார்டன்களும் சில கைதிகளும் இணைந்து சபரி வர்மனின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாற்றுத்திறனாளியான அவரது வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகளும், இரு கால்களிலும் கடுமையான முறிவுகளும் ஏற்பட்டிருந்ததாகவும், உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் உடற்கூராய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.
சம்பவம் தொடர்பான உண்மைகளை உறுதி செய்வதற்காக, சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் அனைத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: “பணத்தை ஏமாற்றலாம்.. திறமையை இல்ல!” – ஏ.ஆர்.முருகதாஸையே தேடி வரவைத்த ஸ்வாசிகாவின் ரியல் ‘மாஸ்’ கம்பேக்!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சபரி வர்மனின் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முன்பு உடலைப் பெற மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின்னரே கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையும் படியுங்க: “70 வருஷ நட்பு.. அவன் பென்ஸ் கார்ல போனான், நான் நடுரோட்டுல நின்னேன்!”பாக்யராஜ் பற்றி ஆர்.சுந்தர்ராஜன் உடைந்து பேசிய ரகசியங்கள்!
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீட்டு மனைப் பட்டா, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவது குறித்து அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சபரி வர்மனின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில்:
“மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரத் தயாராக உள்ளது. குடும்பத்தினர் அரசு வேலை, குழந்தைகளின் கல்வி, வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
மேலும், குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சபரி வர்மனின் குடும்பத்தினர், முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தி இல்லை என்றும், இரண்டாவது முறையாக உடற்கூராய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சபரி வர்மனின் மனைவி, இந்தச் சம்பவத்தை 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சாத்தான்குளம் ஜெயராஜ்–பென்னிக்ஸ் காவல் மரணச் சம்பவத்துடன் ஒப்பிட்டு, “குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை உடலைப் பெற மாட்டோம்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க “விஜய் நடிச்சிருக்க வேண்டிய ‘ரன்’ படம்; மாதவனுக்கு எப்படி போனது?” — மேடையில் உண்மையை உடைத்த லிங்குசாமி!
கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, “தவறுகள் நடக்கும் போது அரசு பொறுப்பேற்காமல், பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறது. மாவட்ட அமைச்சர்கள் கூட இன்னும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்திக்கவில்லை” என்று அரசை விமர்சித்தார்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபரி வர்மன் உயிரிழப்பு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள், உடற்கூராய்வு அறிக்கைகள் மற்றும் கைதிகள், சிறை ஊழியர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
