“உயர் அதிகாரிகள் என் நண்பர்கள், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்று மிரட்டி, ஜாதகம் பார்க்க வரும் பெண்களின் பலவீனத்தையும், நம்பிக்கையையும் பயன்படுத்தி அவர்களின் மானத்தையும், பணத்தையும் சூறையாடியுள்ளார் கோவையை சேர்ந்த ஜோதிடர் ஒருவர்.
அவரது மிரட்டல்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய நிலையில், தைரியமாக வெளிவந்த சில இளம்பெண்களின் அடுத்தடுத்த பாலியல் புகார்களால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. காவல்துறை நேர்மையாக விசாரித்தால் பொள்ளாச்சி சம்பவத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய பாலியல் கொடூரம் வெளிச்சத்திற்கு வரும் என்ற அதிர்ச்சித் தகவல்களோடு கார்த்திகேயனின் போலி முகத்திரை கிழியத் தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம். நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களை வசீகர வார்த்தைகளால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக ஜோதிடர் கார்த்திகேயன் என்பவர் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு, டி.ஜி.பி மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்குப் புகார் மனு அனுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, “என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என மிரட்டிவரும் இவர் மீது, அவரது தந்தையின் மர்ம மரணம் தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஜோதிடர் கார்த்திகேயனால் பாதிக்கப்பட்ட பெண்கள் எழுதியுள்ள அந்த புகார் கடிதத்தில், ”கோவை மாவட்டம், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் தங்களுக்கு தெரிய படுத்திவது. எங்கள் பகுதியில் கார்த்திகேயன் என்கிற ஜோதிடர் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். தொலைபேசியில் 6.30 முதல் 7.00 மணிக்குள் போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது அடுத்த நாள் காலை 5.00 மணிமுதல் 11.00 மணி வரை ஏதாவதொரு நேரத்திற்கு வரச் சொல்வார். அவர் வரச் சொல்லும் நேரத்திற்கு சென்றால் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு ஜாதகத்தைக் கணிக்காமலே வாய்மொழியாக ஜாதகம் சொல்லுவார்.
ஒரு ஜாதகத்திற்கு –500/- பெறுகிறார். பெண்களிடம் அவர்களின் வசதிகேற்ப ஜாதகத்தில் குறை என்று அவர்களை வசியம் செய்து ஏமாற்றி கொண்டிருக்கிறார். பாலியல் ரீதியாக பெண்களை தன் இச்சைக்கு இணங்க வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிருர். தாங்கள் இதனை சரியான முறையில் விசாரணை செய்து இங்கு வரும் பெண்களை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவர் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டனின் குடும்பத்தினர் தன்னிடத்தில் ஜாதகம் பார்த்து செல்கிறார்கள் என எல்லோரிடமும் பெருமையுடன் பேசி வருகிறார். மேலும், ”எனக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளிடம் நெருங்கிய நட்பு உள்ளது. என்னை யாரலும் ஒன்றும் செய்துவிடமுடியாது” என்றும் கூறி மிரட்டி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக
இப்பகுதியில் உள்ள பெண்கள், ஜாதகம் பார்க்க வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு தள்ளி வருகிறார். இந்த வன்கொடுமையில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்கள் யாரிடமும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
எனவே தகுந்த விசாரணை செய்து அனைத்து பெண்களையும் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ள அந்த பகீர் புகார் கடிதம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழக காவல் துறை தலைவர், ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக மற்றொரு 30 வயது இளம்பெண் ஒருவர் கோவை நரசிம்ம நாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்தியேன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கோவை சரக போலீஸ் ஐ.ஜி.யிடம் அளித்துள்ள புகார் மனுவில் ” எனது திருமணத்திற்காக என் பெற்றோர் நீண்டகாலமாக வரன் பார்த்து வந்தனர். எதுவும் சரிவர அமையவில்லை.
இந்த சூழலில் எனக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல பரிகாரங்கள் செய்து வந்தனர். திருமணத்திற்கு சரியான வரன் எதுவும் அமையாததால் பெற்றோர் பட்ட துயரத்தினால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் கார்த்திகேயனை சந்தித்தேன். அவர் ”சில பரிகாரங்களை செய்தால் விரைவில் உனக்கு திருமணம் நடக்கும்” என கூறினார்.
பரிகாரம் என்ற பெயரில் பல முறை என்னை நேரில் அழைத்து சந்தித்தார். பின்னர் ஒருகட்டத்தில் அவரே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்தார். அவர் என்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என நம்பினேன். கடன் பிரச்சினை இருப்பதாக கூறி நான் திருமணத்துக்கு சேமித்து வைத்த பணத்தை கேட்டார், கொடுத்து விட்டேன். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கி விட்டதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றார். என்னிடம் இருந்த பணத்தை அபகரித்துக் கொண்ட பின் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரை பற்றி தீர விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட தகவல் தெரிந்தது. அவரை நேரில் சந்தித்து இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே என அழுது முறையிட்டேன். அதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னுடைய திருமண ஆசையை பயன்படுத்தி என்னை நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்ததோடு மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் கார்த்திகேயன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

”உயர் போலீஸ் அதிகாரிளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் எனக்கு நெருக்கம். அவர்களிடம் கூறி உன்னை தொலைத்து விடுவேன்” எனவும் ஒருகட்டத்தில் மிரட்டினார். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஜோதிடர் கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் மனுவை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர், கோவை மாவட்ட கலெக்டர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து கோவை பகுதியில் ஜோதிடர் கார்த்திகேயன் குறித்து விசாரித்தபோது, ”ஜோதிடர் கார்த்திகேயனின் தந்தை 2021ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் கார்த்திகேயன் மீது சந்தேகம் இருந்தது. ஆனால், அவரது பலமான இன்ப்ளூயன்ஸை வைத்து அந்த விவகாரத்தில் இருந்து மீண்டுவிட்டார். கோவை. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் ரெகுலராக பெண்களுடன் விசிட் அடிப்பார்.
பல பெண்கள் கார்த்தியேயனால் பாலியல் ரீதியாக மோசடிக்கு ஆளாகியுள்ளனர். அவமானம் ஏற்படும் என்பதால் பெண்கள் அவர் மீது புகாரளிக்க தயங்குகின்றனர். இப்போதுதான் அவர் மீது புகார் மனுக்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. காவல்துறை முறையாக விசாரணை நடத்தினால் பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் வகையில் பல விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும்” என அதிர்ச்சியூட்டுகின்றனர் கோவைவாசிகள்.
