சேலம் மாவட்டத்தில், டாஸ்மாக் விற்பனையாளரை மதுப்பிரியர் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 திருப்பித் தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் மது பாட்டில்களுக்கு ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. காலி பாட்டில்களை திருப்பி கொடுத்தால் அந்த ரூ.10 பணம் மீண்டும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காலி பாட்டில்களை வாங்கும் பணியை தாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறி டாஸ்மாக் பணியாளர்கள் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதனையடுத்து, சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
அப்போது, ஒரு மதுப்பிரியர் ரூ.10 கூடுதலாக செலுத்த மறுத்து விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் தராவிட்டால் பாட்டில் வழங்க முடியாது என விற்பனையாளர் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழற்றி விற்பனையாளரை தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
