சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்குள் தடுப்புகளை மீறி நுழைந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 6 நாட்களாக 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்துக்குள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் தடுப்புகளை மீறி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்குள் நுழைந்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணி நிரந்தரம், தினக்கூலியை ரூ.832 ஆக உயர்த்துதல், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, ஒப்பந்த முறையை ஒழித்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பணியில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரை மீண்டும் பணியில் சேர்ப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பானவை என்பதால், அவற்றை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் முழுமையான உடன்பாடு ஏற்படாததால், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், அமைச்சர் ராஜ்மோகன் தலைமையிலும் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சில கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக CPM, CPI, CPI(ML) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் தூய்மைப் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர். இந்தக் கையெழுத்துப் படிவங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் தங்களை நேரில் சந்தித்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, ரிப்பன் மாளிகைக்குள் நுழைந்து தர்ணாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மாநகரின் பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் நேரடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
