தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை வரும் 22ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கூறப்படும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளும் காலியாக உள்ளன.
அதன்படி, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் தாராபுரம் ஆகிய நான்கு தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன.
இந்த ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் விரைவாக மேற்கொண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான நிர்வாக மற்றும் தேர்தல் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் நிலையில், இந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
