தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக, அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போதும் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் ஆறாவது நாளாகவும் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். இருப்பினும், அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொடர் மழையால் பிரதான நீர்த்தேக்கமான மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 1,191 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
