டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதனை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளே தற்போது நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற உடனேயே 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். எனினும், இந்த கடைகளை மூடும் நடவடிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
முறையான ஆய்வுகளும், விரிவான ஆலோசனைகளும் இல்லாமல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோன்று, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவது தொடர்பாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 717 கடைகளில் இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன, எத்தனை கடைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளன.
இதன்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
