காரைக்கால் அருகே வெளியூர் சென்றிருந்த குடும்பத்தின் பூட்டிய வீட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் நிரவி இரண்டாவது சாலையைச் சேர்ந்த சிவக்குமார், கடந்த ஜூன் 13-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதையடுத்து, ஜூன் 15-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிவக்குமார் உடனடியாக நிரவி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருட்டு நடைபெற்ற பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்களது வீடுகளை பாதுகாப்பாக கண்காணிக்க காவல் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தகவல் அளிக்கப்பட்ட வீடுகள் ரோந்து போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிவக்குமார் காவல் நிலையத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் வெளியூர் சென்றிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் நிரவி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
