மேற்கு ஆசியாவில் கொழுந்துவிட்டு எரியும் போர்ப் பதற்றம், உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பிரதமரின் ஒரு முக்கிய வானொலி உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது புகழ்பெற்ற ‘மன் கி பாத்’ (Man Ki Baat) வானொலி நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய அத்தியாவசியக் கடமைகள் குறித்து மிக நிதானமாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் பேசியுள்ளார்.
மேற்கு ஆசியப் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை மனதில் வைத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சில அதிரடி மற்றும் முக்கியமான வேண்டுகோள்களை விடுத்தார்.
பிரதமரின் ‘மாஸ்டர் பிளான்’
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண, தங்கம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். தற்போதைய சூழலில், முடிந்தவரை சிறிது காலத்திற்குப் புதிய தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடுவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்பைப் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். எரிபொருள் தேவைக் குறைப்பிற்காக ‘கார் பூலிங்’ (Carpooling) முறையை ஊக்குவிக்கவும், ஒரே திசையில் பயணிப்போர் வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அறிவுறுத்தினார்.
உலகளாவிய இந்த நெருக்கடிச் சூழலை, இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் பங்கேற்பின் இந்தச் சக்திதான் நம்மை வலுப்படுத்தி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.
பாராட்டிய பிரதமர்
அரசாங்கம் போடும் உத்தரவாக இல்லாமல், ஒரு குடும்பத் தலைவராகப் பிரதமர் விடுத்த இந்த வேண்டுகோளுக்கு இந்திய மக்கள் காட்டிய எதிர்வினை பிரதமரை நெகிழச் செய்துள்ளது.
இந்த முறை பல குடும்பங்கள் தங்களது வீட்டு விசேஷங்களுக்குப் புதிய தங்கம் வாங்குவதைத் தவிர்த்து, வீட்டில் இருக்கும் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதேபோல், பல குடிமக்கள் தங்களது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதையும் அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.
நகரங்களில் கார் பூலிங் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதோடு, மக்கள் பேருந்து மற்றும் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது எரிபொருளைச் சேமிப்பது மட்டுமன்றி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டையும் பெருமளவு குறைக்கிறது.
இயற்கை விவசாயத்திற்கு மாறும் இந்தியா
மறுபுறம், விவசாயத் துறையிலும் ஒரு பெரும் புரட்சி நடந்து வருவதாகப் பிரதமர் கூறினார். இரசாயன உரங்களுக்குப் பதிலாக, இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, நாட்டின் பல பகுதிகளில் இயற்கை விவசாயத்திற்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
