கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்த போதிலும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இதனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி வந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. இதற்குப் பிரதிபலனாக, இக்கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமும் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி தவெக-விற்கு வரும் முக்கிய புள்ளிகளுக்கும், அவர்கள் ஏற்கனவே வகித்த அதே பதவிகள் வழங்கப்படும் என தலைமை உறுதியளித்திருந்தது. இதனால் பல முன்னாள் அதிமுக அமைச்சர்களும் தவெக-வில் ஐக்கியமாகி, தங்களுக்கு ‘விருப்பமான’ அமைச்சர் பதவிகளைக் கேட்கத் தொடங்கினர்.
நாங்கள் எப்போது சம்பாதிப்பது?
இங்குதான் தவெக-விற்குள் நிசப்தமான புயல் வீசத் தொடங்கியது. சொற்ப இடங்களை வைத்துக் கொண்டு கூட்டணியில் இணைந்தவர்களுக்கும், மாற்று முகாமில் இருந்து ஓடி வந்தவர்களுக்கும் முக்கிய அமைச்சர் பதவிகள் வாரி வழங்கப்பட்டதால், தவெக-வின் ரத்தப்பயிரான அடிமட்டத் தொண்டர்களும், மாவட்டச் செயலாளர்களும் கொந்தளிக்கத் தொடங்கினர்.
“20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்றக் காலம் தொட்டு இன்று வரை கட்சிக்காக உழைத்த எங்களுக்கு என்ன பலன்? நாங்கள் கடைசி வரை இப்படியே இருக்க வேண்டுமா? நாங்கள் எப்போது சம்பாதிப்பது?”என்ற முணுமுணுப்பு, மெல்ல மெல்ல தவெக எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலும் கலகக் குரலாக வெடிக்கத் தொடங்கியது.
எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க சதி?
தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, புதிய அரசை நிலைகுலைய வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஆனால், உண்மை என்னவெனில், ‘யார் யார் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்பதைக் கண்டறிய தவெக தலைமையே திட்டமிட்டு கசியவிட்ட ‘பாதி உண்மை, பாதி பொய்’ கலந்த செய்திதான் அது. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் கையாண்ட அதே உளவு வியூகத்தை விஜய் கையில் எடுத்தார்.
இதையடுத்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உளவுத்துறையின் உதவியோடு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் அன்றாட நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். உளவுத்துறை அளித்த பட்டியலை, தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் மூலம் ‘கிராஸ் செக்’ செய்து, ஒரு ரகசிய ரிப்போர்ட்டாக முதல்வர் விஜய்யின் மேஜைக்குக் கொண்டு சேர்த்தார் புஸ்ஸி ஆனந்த்.
விஜய்யின் ‘மியூசிக்கல் சேர்’ ஆஃபர்!
தன் கண்முன்னே இருந்த உளவுத்துறை அறிக்கையைப் பார்த்து கடும் அப்செட் அடைந்த முதல்வர் விஜய், “ஆட்சிக்கு வந்த இவ்வளவு குறுகிய காலத்திலேயே இப்படியெல்லாமா நடக்கும்? மிரட்டல்களுக்கு நாம் பயப்படக் கூடாது” என்று பனையூர் வட்டார ஆலோசனையில் ஆவேசப்பட்டுள்ளார்.
அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் ‘சுழற்சி முறையில் அமைச்சர் பதவி’. “அமைதியாக இருங்கள், உங்களுக்கான காலம் வரும். என்னை நம்பி இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்கப்படும்” என எம்.எல்.ஏ-க்களுக்கு ஆஃபர் கொடுத்துள்ளார் விஜய்.
கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட 40-க்கும் மேற்பட்ட வாரியத் தலைவர் பதவிகளை வழங்க லிஸ்ட் தயாராகி வருகிறது. மாற்று முகாமில் இருந்து வந்தவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி மட்டுமே தரப்படும், கட்சிப் பதவி கிடையாது என்பதில் தலைமை உறுதியாக உள்ளது.
தற்போதைய 35 அமைச்சர்களில், சில தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதால், அவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களைக் கொண்டு வர தலைமை திட்டமிட்டுள்ளது.
“ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அமைச்சரவை மாற்றமா?” என விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் தகுதியானவர்களை மட்டுமே பதவியில் நீட்டிக்க வைக்க விஜய் சம்மட்டி அடி கொடுத்துள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த சுழற்சி முறை அறிவிப்பால், தவெக-வின் அதிருப்தியாளர்கள் பலரும் தற்போது ‘கப்சிப்’ ஆகியுள்ளனர்.
