https://republictn.com/

‘ஆனந்தம்’ திரைப்படம் வெற்றி பெறும் என்ற எந்தக் கணக்கும் இல்லாமல், மனதிற்கு பிடித்த படமாக உருவாக்கப்பட்டதாக லிங்குசாமி தெரிவித்தார். ஆனால் இரண்டாவது படம் தோல்வியடையக் கூடாது என்ற எண்ணத்தில், காதலும் வீரமும் கலந்த ஜனரஞ்சகமான கதையாக ‘ரன்’ திரைப்படத்தை உருவாக்கியதாகக் கூறினார்.

‘ரன்’ திரைப்படம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுவது தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும், எங்கு சென்றாலும் “ரன் மாதிரி இன்னொரு படம் எடுங்கள்” என்று ரசிகர்கள் கூறுவது தனது மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவர் தெரிவித்தார். இதுவே அந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், ‘ரன்’ திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயிடம் சொல்ல திட்டமிட்டதாகவும், ஆனால் அப்போது அது ‘லவ் வித் ஆக்ஷன்’ கதை என்பதால் அந்தத் திட்டம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். அதன் பிறகே ‘கில்லி’ உருவானதாகவும் கூறினார்.

அதேபோல், ‘சண்டைக்கோழி’ திரைப்படத்தின் கதையையும் விஜயிடம் கூறியபோது, முதல் பாதி கேட்ட பிறகு அவர் அந்த வாய்ப்பை தவிர்த்ததாகவும், படம் வெளியான பின் அதை பார்த்த விஜய், “படம் அருமையாக இருந்தது” என்று நேரில் பாராட்டியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

‘அஞ்சான்’ திரைப்படம் குறித்து பேசிய லிங்குசாமி, அந்தப் படத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பும், சில விளம்பரங்களும் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

திரைப்படத்தில் சில தவறுகள் இருந்ததைத் தாம் ஒப்புக்கொள்வதாகவும், அதனால் ரீ-எடிட்டிங் செய்து திருத்த முயன்றதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்தத் தோல்வியை விட, அதனைச் சுற்றிய எதிர்மறை விமர்சனங்களே தன்னை அதிகம் பாதித்ததாகவும், பின்னர் அதனைத் தாங்கும் மனவலிமை கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

திரைப்பட வெற்றி, தோல்வி என்பது ஒவ்வொரு இயக்குநரின் வாழ்க்கையிலும் இயல்பான ஒன்று என்றும், எந்தப் படம் வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் லிங்குசாமி தெரிவித்தார்.

மேலும், ஒரு இயக்குநர் காலத்தின் போக்கை மட்டும் பின்பற்றாமல், தன்னுடைய கதையையும் நம்பிக்கையையும் முழுமையாக நம்பி படைப்பில் ஈடுபட வேண்டும் என்றும், அதுவே புதிய திரைப்படப் போக்குகளை உருவாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். சினிமாவில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதே வெற்றிக்கான முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago