வயதான தந்தையின் சிரமத்தை குறைக்க பனை மரத்தில் இரும்புப் படிக்கட்டு அமைத்த இளைஞர்… சமூக வலைத்தளங்களில் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, பனைத் தொழிலைப் பாதுகாப்பதற்காகவும், வயதான தனது தந்தையின் சிரமத்தைக் குறைப்பதற்காகவும் இளைஞர் ஒருவர் பனை மரத்தில் இரும்புப் படிக்கட்டு அமைத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்பதூர் கிராமத்தைச் சேர்ந்த தினகர் என்ற இளைஞர் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது குடும்பம் பல தலைமுறைகளாக பனைத் தொழிலை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வயது முதிர்ந்த தனது தந்தை பாதுகாப்பாக பனை மரத்தில் ஏறி பனைத் தொழிலைத் தொடர வேண்டும் என்பதோடு, இந்த பாரம்பரிய தொழிலை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 55 அடி உயரமுள்ள பனை மரத்தில் சுமார் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்புக் கம்பிகளால் வளைவு வடிவிலான படிக்கட்டுகளை அமைத்துள்ளார்.
இந்த இரும்புப் படிக்கட்டு மூலம் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கூட பாதுகாப்பாக பனை மரத்தின் உச்சிப் பகுதிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிக்கட்டு அமைப்பதற்கு சுமார் ரூ.60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது குறைந்தது 15 ஆண்டுகள் வரை பனைத் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது தோட்டத்தில் உள்ள மற்ற பனை மரங்களிலும் இதேபோன்ற இரும்புப் படிக்கட்டுகளை அமைக்க தினகர் திட்டமிட்டுள்ளார்.
அபாயகரமான பனை ஏறும் தொழிலில் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, தனது தந்தையின் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் இந்த புதுமையான முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
