அளவுக்கு அதிகமான பாதரசம் (மெர்குரி) கலந்த அழகு சாதனக் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் இந்த ஆபத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
மகாராஷ்டிராவின் நாக்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பாகிஸ்தான் தயாரிப்பான ‘கோரி’ உள்ளிட்ட சில நிறமாற்றக் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்திய 18 பெண்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், புனேயில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த 30 வயது இளைஞர், முகப் பொலிவை அதிகரிக்கும் நோக்கில் உள்ளூர் தயாரிப்பு க்ரீம் ஒன்றை சில மாதங்கள் பயன்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக அவரது கால்களில் கடுமையான வீக்கம் ஏற்பட்டதுடன், சிறுநீரில் அதிக அளவு புரதக் கசிவு ஏற்பட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ‘கோரி பியூட்டி க்ரீம்’, ‘ஃபேஸ் ஃப்ரெஷ் கோல்டு’, ‘கோல்டன் ஸ்டார் பியூட்டி க்ரீம்’ ஆகிய மூன்று தயாரிப்புகளுக்கு உடனடியாக தடை விதித்துள்ளது.
இந்த க்ரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 752 மடங்கு அதிகமாக பாதரசம் மற்றும் ஈயம் கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, பாதரசம் தோலின் மெலனின் உற்பத்தியைத் தடுத்து, தற்காலிகமாக சருமத்தை வெளிரச் செய்கிறது. ஆனால், அது தோலின் வழியாக ரத்தத்தில் கலந்து, நாளடைவில் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை கடுமையாக பாதித்து நிரந்தர சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற க்ரீம்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- கால்கள், கைகள் மற்றும் முகத்தில் திடீர் வீக்கம்.
- சிறுநீரில் அதிக நுரை தோன்றுதல்.
- கடுமையான சோர்வு மற்றும் திடீர் உடல் எடை அதிகரித்தல்.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கைகளில் நடுக்கம் அல்லது மனஅழுத்தம் ஏற்படுதல்.
மேலும், இணையதளம் அல்லது உள்ளூர் கடைகளில் வாங்கப்படும் அழகுப் பொருட்களில் தயாரிப்பு நிறுவனம், உரிம எண், காலாவதி தேதி மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
“உடனடி நிறமாற்றம்”, “அற்புத வெண்மை” போன்ற விளம்பரங்களை நம்பி தரமற்ற, அங்கீகாரம் பெறாத க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது என்றும், தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தன்னிச்சையாக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தாமல், தகுதியான தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே பாதுகாப்பானது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
