முன்னாள் உச்சத் தலைவர் அலி காமினேயின் ஒரு வார கால இறுதிச் சடங்குகளின்போது ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புச் சம்பவங்களைச் சமாளிக்க ஈரான் அதிகாரிகள் அவசரக்காலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர். கூட்ட நெரிசல் தொடர்பான சம்பவங்களில் 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய ரெட் கிரசண்ட் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆகியவை முதல் துணை ஜனாதிபதி முகமது-ரெசா அரேஃப்பிற்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில், இறுதி ஊர்வலங்களின்போது 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்கக்கூடிய மிக மோசமான சூழல் கணிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் பெருந்திரளான மக்கள், கடும் வெப்பம் ஆகியவை இணைந்து, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நெரிசல், கூட்டம் தொடர்பான பிற சம்பவங்களைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில், அவசரக்கால அதிகாரிகள் விரிவான பேரிடர் மீட்புத் திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தெஹ்ரானின் பெஹெஷ்ட்-இ-ஸஹ்ரா கல்லறையில் ஆயிரக்கணக்கான கூடுதல் கல்லறைகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக தெஹ்ரான் நகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவித்தார். “தயார் நிலையில் உள்ள கல்லறைகள் உண்மையில் உள்ளன. 3,000 சடலங்கள் வரை கையாளலாம் என்று பொறுப்பாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம், கடும் வெப்பம் நிலவும் சூழலில், என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது,” என்று அந்த ஊழியர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெரிய பேரிடர் ஏற்பட்டால், உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களைக் கையாள்வதை ஒருங்கிணைக்க ஒரு சிறப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. 1989 முதல் தனது இறப்பு வரை ஈரானை ஆட்சி செய்த கமேனி, பிப்ரவரி 28 அன்று ஈரான்-இஸ்ரேல் போர் தொடங்கிய நாளில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில், தனது குடும்ப உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் பலருடன் சேர்ந்து 86 வயதில் கொல்லப்பட்டார்.
இறுதிச் சடங்குகள் ஒரு வாரம் முழுவதும் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. கமேனியின் சவப்பெட்டி மூன்று நாட்கள் தெஹ்ரானில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் செவ்வாய்க்கிழமை புனித நகரமான கோமுக்கு கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை அண்டை நாடான ஈராக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். வியாழக்கிழமை அன்று வடகிழக்கு ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹாதில் அவர் அடக்கம் செய்யப்படுவார்.
பிப்ரவரி 28 தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவரும் அடக்கம் செய்யப்பட உள்ளார். இவர்களில் கைக்குழந்தையான அவரது பேத்தி ஜஹ்ரா முகமதி கோல்பைகானி, அவரது மகள், மருமகன், அவரது மகன் மொஜ்தபா கமேனியின் மனைவி ஆகியோர் அடங்குவர்.
2020-ல் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் குட்ஸ் படைத் தளபதி காசிம் சுலைமானியின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய கூட்ட நெரிசலின் தாக்கத்தால் இந்த அவசரக்காலத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தக் கூடினர். ஜனவரி 7, 2020 அன்று அவரது சொந்த ஊரான கெர்மனில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின்போது, ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் குறைந்தது 56 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால், கூட்டத்தைக் கலைத்து அப்பகுதியைப் பாதுகாப்பானதாக மாற்றும் வரை, இறுதிச் சடங்கு நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும், சுலைமானியின் அடக்கம் செய்யும் நிகழ்வைச் சில மணிநேரங்கள் ஒத்திவைக்கவும் ஈரானிய அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கமேனியின் இறுதி ஊர்வலங்களில் மீண்டும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மிக மோசமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராகி, 2020-ல் நிகழ்ந்த துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தவிர்க்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
