மெக்சிகோ நாட்டின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா, தனது பகுதி மக்களின் நல்வாழ்வு, இயற்கை வளம் மற்றும் விவசாயச் செழிப்பு வேண்டி, பாரம்பரிய சடங்கின்படி பெண் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வினோதமான பாரம்பரிய நிகழ்வு, ஓக்ஸாகா மாநிலத்தில் வாழும் ஹுவேவ் பழங்குடியின மக்களின் ஹிஸ்பானிக் காலத்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
இந்தச் சடங்கின் மூலம் மழை நன்கு பெய்யவும், உணவு வளம் பெருகவும், மீன் வளம் அதிகரிக்கவும் இயற்கையிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது. மேலும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பிணைப்பை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் இந்தத் திருமணம் கருதப்படுகிறது.
“அலிஷியா அட்ரியானா” என்று அழைக்கப்படும் அந்தப் பெண் முதலைக்கு வெள்ளை நிற திருமண ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், முதலையின் வாய் பாதுகாப்பு கருதி கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது.
ஊர் பொதுமக்கள் முன்னிலையில், பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களுடன் திருமணச் சடங்கு விமரிசையாக நடைபெற்றது.
திருமணச் சடங்கின் நிறைவாக, மேயர் விக்டர் ஹ்யூகோ சோசா, அந்தப் பெண் முதலையின் தலையில் முத்தமிட்டு தனது மரியாதையையும் நேசத்தையும் வெளிப்படுத்தினார்.
சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய விழா, நகரின் வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு, இயற்கை வளம் மற்றும் சமூக ஒற்றுமையை வேண்டி நடத்தப்படும் முக்கிய கலாச்சார நிகழ்வாக உள்ளூர் மக்களால் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
