https://republictn.com/

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டிற்கு அவரது உறவினரின் மூன்றரை வயது பெண் குழந்தை நேற்று மாலை சென்றிருந்தது. அங்கு வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டதாகக் கூறி அழுதுள்ளது.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையிடம் விசாரணை நடத்தியபோது, தாத்தா வயதுடைய ஒருவர் தனது பிறப்புறுப்பில் கை வைத்ததாக குழந்தை தெரிவித்துள்ளது.

இதையடுத்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இன்று காலை எம்.நகர் பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படும் அந்த முதியவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியதுடன், குமாரபாளையத்தில் இது போன்ற போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் சேலம்–குமாரபாளையம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

போலீசார் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை போராட்டம் தொடர்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago