ஜப்பானின் வடகிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளன.
கடந்த சில நாட்களாக ஜப்பானின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. இதில், வடகிழக்கு ஜப்பானின் இவாடே மாகாணக் கடற்பகுதியில், 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.9 ஆகக் கணக்கிடப்பட்ட நிலையில், பின்னர் அது 7.2 ஆக அதிகாரப்பூர்வமாகத் திருத்தப்பட்டது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதன் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டன. ஆமோரி மாகாணத்தில் மக்கள் நிற்கக்கூட முடியாமல் தடுமாறும் அளவுக்கு நில அதிர்வு தீவிரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹோகு ஷிங்கான்சென் அதிவேக ரயில் சேவைகளும், பல முக்கிய எக்ஸ்பிரஸ்வே சாலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, புஜி மலைக்கு வடக்கே அமைந்துள்ள யாமானாஷி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.6 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவானது. இதனால் கடைகளில் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதமடைந்தன.
மேலும், இன்று அதிகாலை 5.21 மணியளவில் இவாடே மாகாணக் கடற்பகுதியில், 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கங்கள் எதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒனாகாவா மற்றும் ஹிகாஷிடோரி அணுமின் நிலையங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜப்பானில் தற்போது சூறாவளி மற்றும் கனமழை நீடித்து வருவதால், தொடர் நிலநடுக்கங்களின் தாக்கத்துடன் இணைந்து பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் சனாயே தாகாய்ச்சி, பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மீட்பு மற்றும் அவசர உதவிக் குழுக்கள் முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஜப்பானில் ஆண்டுதோறும் ஏற்படும் ‘சுயு’ மழைக்காலம் நிலவி வருகிறது. இதனுடன், ‘மெக்காலா’ மற்றும் ‘ஹிகோஸ்’ ஆகிய இரட்டைச் சூறாவளிகளின் தாக்கமும் இணைந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வானிலை நிலவி வருகிறது.
ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, பாதுகாப்பு அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தொடர் நில அதிர்வுகளாலும், சூறாவளி மழையாலும் மண் தளர்ந்து போயுள்ளதால், பல மாகாணங்களுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலச்சரிவு எச்சரிக்கைகளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
யமகுச்சி மாகாணத்தில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், ஷிசுவோகா, கனகாவா மற்றும் சிபா மாகாணங்களுக்கு நான்காம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனுடன், கியோட்டோவில் உள்ள காமோ நதியிலும், ஒசாகா, நாரா மற்றும் ஹிரோஷிமா பகுதிகளில் உள்ள பல ஆறுகளிலும் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஏராளமான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
நிலநடுக்கம், கனமழை, இரட்டைச் சூறாவளி மற்றும் நிலச்சரிவு அபாயம் ஆகியவை ஒரே நேரத்தில் ஜப்பானை கடுமையாகப் பாதித்து வருவதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
