தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த நிர்வாகியுமான எ.வ. வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, “மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக பதிலளித்துள்ளேன். தவறு செய்யாததால் பயமில்லை. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்க:- யாருக்குத் துணையாகப் போகிறார் தினகரன்..? எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!
கடந்த 2022ஆம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ. வேலு பதவி வகித்தபோது, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கப்பட்டதாகவும், அதில் முறைகேடு நடைபெற்றதாகவும் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி முன்னிலையில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தது.
இதையும் படியுங்க:- “ஆசிரியரா இவர்? மாணவனை இரும்புச் சுத்தியலால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”
நீதிமன்ற உத்தரவின்படி, இன்று காலை சுமார் 10.45 மணியளவில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு வந்த எ.வ. வேலுவிடம், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. மறைப்பதற்கு எதுவுமில்லை. விசாரணை அதிகாரிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், எனக்குத் தெரிந்த உண்மைகளை நூறு சதவீதம் துல்லியமாகப் பதிலளித்துள்ளேன்.
நீதிமன்ற உத்தரவை மதித்து இன்று ஆஜராகியுள்ளேன். அவர்கள் கேட்ட கேள்விகளையும், நான் அளித்த பதில்களையும் கணினியில் பதிவு செய்தனர். மீண்டும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படியுங்க:- நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!
மேலும், “விசாரணை நடத்தும் அதிகாரிகள் வெறும் அம்புதான்; எய்தவர்கள் வேறு இடத்தில் இருக்கிறார்கள்” என்று கூறிய அவர், இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில், “சட்டத்தின் மீதும், காவல்துறையினர்மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவர்கள் தங்களது கடமையை மட்டுமே செய்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை திமுக ஆட்சியில் இருந்தபோதும் இதே காவல்துறையினர்தான் பணியாற்றினர்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:- சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!
இந்த வழக்கின் விசாரணையின்போது, மருத்துவக் காரணங்களுக்காக சிங்கப்பூர் சென்றது தொடர்பான விவரங்கள், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாலைப் பணிகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த வழக்கில் எ.வ. வேலுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது அரசுத் தரப்புக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்து வரும் ஆதாரங்கள் மற்றும் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
