https://republictn.com/

தமிழக அரசியல் களம் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரால் செம அணலாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ள தவெக எம்.எல்.ஏ-க்கள் அங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை ஏற்கனவே பயிற்சி அளித்திருந்தாலும், புதுமுகங்களான அவர்கள் சற்று திகைப்புடனேயே அமர்ந்துள்ளனர். ஆனால், அதைவிட ஒரு மெகா அதிரடி கோட்டை வட்டாரத்தில் அரங்கேறி வருகிறது.

உளவுத்துறை கண்காணிப்பு
பொதுவாக எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் உளவுத்துறையை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களைத்தான் கண்காணிப்பார்கள். ஆனால், இங்கே முதலமைச்சர் விஜய் தனது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களையே உளவுத்துறை மூலமாகச் சல்லடை போட்டுத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்.

தவெக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றம் முடிந்து வெளியே செல்லும்போது யாரைச் சந்திக்கிறார்கள்? நைட்டோடு நைட்டாகவோ அல்லது பகலிலோ இவர்களது வீட்டிற்கு யார் வந்து போகிறார்கள்? இவர்களது உறவினர்கள் எவரேனும் எதிர்க்கட்சியினருடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது வரை அக்குவேறு ஆணிவேறாக முதலமைச்சரின் நேரடி ரேடாருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திமுக-வின் ரகசிய ‘ஆபரேஷன்’
சொந்தக் கட்சியினரையே விஜய் சந்தேகிக்கக் காரணம் என்னவென்று விசாரித்தபோதுதான் எதிர்க்கட்சியான திமுக-வின் மாஸ்டர் பிளான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தவெக-விற்குள் மாவட்டச் செயலாளர் பதவிகள் கிடைக்காததால் லோக்கல் அளவில் சில எம்.எல்.ஏ-க்களுக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கீர்த்தனாவுக்குக் கட்சி, ஆட்சியில் அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் தென்மாவட்ட தவெக எம்.எல்.ஏ-க்கள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

இந்த அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, எப்படியாவது ஒரு 20 எம்.எல்.ஏ-க்களை வளைத்து விஜய்யின் இளம் ஆட்சியைப் பின்நாட்களில் கவிழ்க்க திமுக ஸ்கெட்ச் போட்டுள்ளது. இந்த ‘ஆபரேஷனை’ கச்சிதமாக முடிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான ஏ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட மெகா டீம் ஃபீல்டில் இறங்கி வேலை பார்த்து வருகிறது. இதையறிந்தே முதலமைச்சர் விஜய் முன்கூட்டியே உளவுத்துறை மூலம் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளார்.

மேலும், பழைய அரசு ஒப்பந்ததாரர்கள் சிலர் தவெக எம்.எல்.ஏ-க்களை அணுகி, “கடந்த ஆட்சியில் இவ்வளவு கமிஷன் கொடுத்தோம், உங்களுக்கு அதைவிட வெயிட்டாகக் கவனிக்கிறோம்” எனத் டேபிளுக்கு அடியில் பேசி லஞ்சக் கலாச்சாரத்தை விதைக்க முயல்வதையும், ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய விஜய் இந்த அதிரடி கண்காணிப்பை ஏவியுள்ளார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago