மதுரையில் மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர், தனது காரை பழுது நீக்குவதற்காக மதுரை பலங்காநத்தம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மெக்கானிக் ஷாப்பில் ஒப்படைத்திருந்தார்.
காருக்குத் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காததால், கடந்த நான்கு நாட்களாக அந்த கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காரை சர்வீஸ் செய்ய ஊழியர்கள் அதன் அருகே சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் காரின் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது, காரின் உள்ளே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக சுப்பிரமணியபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த பெண் யார்? அவர் எவ்வாறு காருக்குள் வந்தார்? இது கொலை சம்பவமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
