அதிமுக-வுக்குள் மீண்டும் உள்கட்சிப் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பாயவிருந்த நடவடிக்கைகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, வெளியில் அனைத்தும் சுமுகமாக இருப்பது போல் காட்டப்பட்டாலும், கட்சியின் உள்வட்டாரத்தில் நிலவும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணி, கொங்கு மண்டலத்தின் வலுவான புள்ளியான எஸ்.பி. வேலுமணி அணி என இரு துருவங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர்.
இந்த உள்கட்சிப் பூசலின் பகிரங்கமான வெளிப்பாடு தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அரங்கேறியுள்ளது. வேலுமணி கேம்பின் முக்கியத் தூணாகக் கருதப்படும் சி.வி. சண்முகம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவைக்கு வரவில்லை. மாறாக, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைத்துவத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சென்னை சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்கு ஓடிச் சென்று, அங்கு அதிரடியான ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அவசரக் கூட்டம் கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரகசியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய செக் வைக்கப் போகிறது. “இனிமேல் எந்த மாற்றுப் பாதைக்கும் செல்ல வேண்டியதில்லை. கட்சியின் தற்போதைய ஒற்றைத் தலைமைத்துவத்தை எப்படியாவது மாற்றியே தீர வேண்டும்” என்பதில் இந்த அதிருப்தி குழுவினர் உறுதியாக இருக்கின்றனர். இதற்காக, வேலுமணி தலைமையிலான இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் டீம், ‘சின்னம்மா’ சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கோரப் பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளனர். சசிகலா மீண்டும் அதிமுகவின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவரிடம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்த இந்த டீம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு சரிவுகளைச் சந்தித்து வரும் சூழலில், வேலுமணி டீம் கையில் எடுத்துள்ள இந்த ‘சசிகலா அஸ்திரம்’ எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இரட்டை இலை சின்னமும், கட்சியின் கட்டுப்பாடும் மீண்டும் சசிகலாவின் கைகளுக்கு மாறுமா அல்லது எடப்பாடி இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற விவாதம் தற்பொழுது தமிழக அரசியலைத் தீப்பற்ற வைத்துள்ளது. அடுத்த சில நாட்களில் அதிமுகவில் ஒரு பெரிய தலைமை மாற்றம் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
