அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவருமான தமிழக அரசியலில் ‘அமைதிப் புயல்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் ரீதியாக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, ஒருவித முடக்க நிலையைச் சந்தித்து வருவதாக தேனி மற்றும் போடி வட்டார உள்குத்துத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து 4-வது முறையாக வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தாலும், கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் காட்டி வரும் தீவிர அரசியல் மௌனம், அவரது எஞ்சிய விசுவாசிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஓபிஎஸ் தமக்கு அதிக வாக்குகள் கிடைத்த பகுதிகளில் மட்டுமே பெயரளவுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன்பின்னர், தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளையோ, செய்தியாளர் சந்திப்புகளையோ அவர் திட்டமிட்டுத் தவிர்த்து வருகிறார்.
தற்போது தனது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் போடி பகுதியில் உள்ள தனது பாரம்பரிய ஏலக்காய் மொத்த வியாபார மண்டியிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு, முழுநேர வியாபாரியாக முடங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்களே முணுமுணுக்கிறார்கள்.
எனக்கே இன்னும் திமுக-வில இடம் கிடைக்கல…
தேர்தலுக்கு முன்பாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருந்தார். ஆனால், தேர்தல் முடிந்து தவெக புதிய ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், திமுகவில் தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் பொறுமையிழந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அண்மையில் ஒரு தனியார் மண்டபத்தில் ரகசியமாகக் கூடி, ஒட்டுமொத்தமாக தவெக-வில் இணைந்துவிடலாமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஓபிஎஸ்ஸிடம் பேச முயற்சித்தபோது, அவர் ஆதரவாளர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்த்ததோடு, “எனக்கே இன்னும் திமுக-வில் முறையான இடமும் பிடிமானமும் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் நாம் அவசரப்படக் கூடாது, பொறுத்திருங்கள்” என மழுப்பலாகப் பதில் கூறி நழுவியதாகக் கூறப்படுகிறது.
தவெக-வை நோட்டமிடும் வாரிசு
தலைவரிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், இத்தனை காலம் ஓபிஎஸ்ஸின் நிழலாக, தூண்களாக இருந்த முக்கியப் புள்ளிகள் பலர், “இனி இவரை நம்பிப் பிரயோஜனம் இல்லை” என்ற முடிவுக்கு வந்து, தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருதி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கே ‘யு-டர்ன்’ அடித்துத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
எஞ்சியிருக்கும் ஒரு சில ஆதரவாளர்களையும் அமைதி காக்குமாறு ஓபிஎஸ் அறிவுறுத்தி வரும் வேளையில், அவரது வீட்டில் இருந்தே ஒரு புதிய ட்விஸ்ட் கிளம்பியுள்ளது. ஓபிஎஸ்ஸின் மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியும், அக்கட்சியின் ஆதரவாளராகவும் மெல்ல மெல்ல மாறி வருவது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படும் முக்கிய நகர்வாக மாறியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் தஞ்சமடைந்து, இப்போது தவெக-வின் அரசியல் அலையை எதிர்கொள்ள முடியாமல் ஏலக்காய் மண்டியில் அடைக்கலமாகியுள்ள ஓபிஎஸ்ஸின் ‘அரசியல் தர்மயுத்தம்’ அடுத்த கட்டமாக எங்கே போய் முடியப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

[…] ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… … […]
[…] ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… … […]