https://republictn.com/

அதிமுகவின் பொதுச் செயலாளராக அண்ணாமலையைக் கொண்டு வர அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் சிலர் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக அண்மைக்காலமாக ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எரிமலையாய் வெடித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்குக் கடும் கொந்தளிப்புடன் பதிலளித்த கே.பி.முனுசாமி, “உண்மையான அதிமுக தொண்டனின் பார்வை எந்தச் சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறொருவரை நோக்கி இருக்காது. இது நீங்களாகவே (ஊடகங்கள்) செட்டப் செய்து உருவாக்கிய ஒரு மாயத் தோற்றம். இதன் மூலம் அண்ணாமலைக்கு நீங்கள் விளம்பரம் தேடிக் கொடுக்கிறீர்கள். 54 வருடப் பாரம்பரியமிக்க ஒரு கட்சி, நேற்று எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு நபருக்காகத் தீர்மானம் போடும் என்று கேள்வி கேட்பதே தர்மத்திற்குப் புறம்பானது. பதவி சுகத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் ஓடுபவர்கள் வேண்டுமானாலும் இப்படிச் சிந்திக்கலாம். ஆனால், அவர்கள் ஜாம்பவான்கள் கிடையாது. திமுகவில் போனால் அவர்களுக்கு அமைச்சர் பதவியோ, உரிய வாய்ப்போ கிடைக்காது.

இப்போது புதிதாக வந்துள்ள கட்சியில் தவெக தொண்டர்கள் இல்லை, அது வெறும் ரசிகர் மன்றம் மட்டுமே. அங்கே போய் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஓடுகிறார்கள். அதிமுகவில் மாமன்னர்களாக வலம் வந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு வரும்போதும் மாலை மரியாதையைப் பெற்ற இந்த மகாராஜர்கள், இப்போது அந்தப் புதிய கட்சியின் கேட் எப்போது திறக்கும் என்று ஏக்கத்தோடு ஆட்டு மந்தைகளைப் போல ஓடுகிறார்கள்.

அதிமுகவில் தலைமை சரியில்லை என்று கூறப்படுவது சரியல்ல. கடந்த 10 வருடங்களாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி மிகவும் சிரமப்பட்டு, உழைத்து, தியாகம் செய்து இன்று தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்குகிறார். தொண்டர்களிடத்தில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே சிலர் இப்படிப் பேசுகிறார்கள்” என்று இபிஎஸ்-ஸிற்கு ஆதரவாகப் பேசினார்.

அதிமுக தலைமைக்கு அண்ணாமலையைக் கொண்டு வர மாவட்டச் செயலாளர்களோ, நிர்வாகிகளோ எந்த இடத்திலும் கோரிக்கை வைக்கவில்லை. அண்ணாமலை தனி இயக்கம் காண உள்ள நிலையில், அவர் புகழ் வெளிச்சம் பெறுவதற்காக அவரது தரப்பில் இருந்தே திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி இது என்று கே.பி.முனுசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏற்கனவே பேரறிஞர் அண்ணாவையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் அண்ணாமலை விமர்சித்திருந்ததால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

One thought on “அதிமுக தலைமைக்கு வருகிறாரா அண்ணாமலை? – தீயாய் பரவிய வதந்திக்கு எரிமலையாய் வந்த பதில்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago