உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் மேகமலையில் அனுமதி இன்றி இயங்கி வந்த ஒன்பது தங்கும் விடுதிகள், தொழிலாளர் குடியிருப்புகளை வருவாய்த்துறையினர் சீல் வைத்து பூட்டி அடைத்தனர்.
புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜான் கென்னடி என்ற சமூக ஆர்வலர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதி இன்றி தனியார் தங்கு விடுதிகள் இயங்குவதாகவும், இயற்கை சூழல் பாதிக்கப்படுவதாகவும், அதை அகற்றுவதற்காக பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மயிலாடும்பாறை, வருசநாடு, மேகமலை, சின்னமனூர் மற்றும் கண்டமனூர் ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள இடங்களை மீட்க உச்சநீதிமன்றம் கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் பேரில் ஆண்டிபட்டி வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேகமலை கிராமம், ஹைவேஸ் பேரூராட்சி பகுதியில் 9 இடங்களில் வனத்துறை அனுமதி இன்றி செயல்பட்ட தங்கும் விடுதிகள் தொழிலாளர் குடியிருப்புகள் ஆகியவற்றை சீல் வைத்து பூட்டியதோடு மின் இணைப்பையும் துண்டித்தனர்.
இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ”ஜமீன்தார்கள் காலம் முதல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தற்போது வரை பட்டா வைத்துள்ள இடத்தில்தான் நாங்கள் விவசாயம் செய்து குடியிருந்து வருகிறோம். தற்போது தவறுதலாக தங்கும் விடுதி எனக்கூறி தொழிலாளர் குடியிருப்புகளை பூட்டி சீல் வைத்ததால் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” எனக் கூறினார்.
ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… தவெக நோக்கி நகரும் மகன்… தவிக்கும் ‘தர்மயுத்த’ நாயகன்!
மேலும் அப்பகுதி சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர் சங்க செயலாளர் முத்தையா கூறுகையில், ”இப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகள் சிதலமடைந்து பல ஆண்டுகளாக இருக்கிறது. சீரமைப்பு செய்ய கட்டுமான பொருட்கள் கொண்டு வர அனுமதி கோரி இது நாள் வரை எவ்வித அனுமதி கொடுக்காமல் தொழிலாளர் குடியிருப்பு கட்டங்கள் சிதிலமடைந்து வருகிறது.
விஜய் போட்ட கறார் ஆர்டர்… கழற்றிவிட்ட திமுக… எங்கே ஓடினார் செந்தில் பாலாஜி..?
ஆனால், நீதிமன்ற தீர்ப்பின்படி வனத்துறையில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை எடுக்காமல் பட்டா இடங்களில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளை சீல் வைத்து அதிகாரிகள் செயல்படுவதை பார்க்கும் போது மேகமலை வனப்பகுதியில் இருந்து தொழிலாளர்களை விரட்டியடிக்கும் நோக்கில் செயல்படுவதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஹைவேஸ், மேகமலை வனப்பகுதி மக்களிடம் முகாமிட்டு உண்மையான ஆக்கிரமிப்பை அகற்றி தொழிலாளர்கள் குடியிருப்புகளை அகற்றத்தை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-த. முத்துவெளியப்பன், தேனி, சிறப்பு நிருபர்
