அதிகாரத்திற்கு வந்த சில மாதங்களிலேயே, தவெக-வின் எம்.எல்.ஏ-க்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவத் தயாராக இருந்த அதிர்ச்சித் தகவல், உளவுத்துறை மூலம் அம்பலமாகியுள்ளது.
பனையூர் ஆபீஸில் வெடித்த ஆவேசம்
எந்தவொரு புதிய கட்சியிலும் பதவிப் பகிர்வின் போது சலசலப்புகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், தவெக-வில் அது அக்னிப் பிழம்பாக வெடித்துள்ளது. அண்மையில் தவெக-வின் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலர் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கடும் முரண்பாடுகள் காரணமாக, 10-க்கும் மேற்பட்ட தவெக எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்றனர். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே, “எங்களுக்குக் கட்சியில் மரியாதை இல்லையென்றால், நாங்கள் திமுக-விற்குச் செல்லவும் தயங்க மாட்டோம்” என்று கட்சித் தலைமையிடமே நேருக்கு நேர் ஆவேசமாகப் பாய்ந்துள்ளனர். இந்த உட்கட்சிப் பூசல்தான், தற்போது அரங்கேறியுள்ள குதிரை பேரச் சதிக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
மோப்பம் பிடித்த போலீஸ்
ஆட்சி மாற்றத்திற்காகக் காத்திருக்கும் எதிர்த்தரப்பு, தவெக-வுக்குள் எழுந்த இந்த உள்குத்துக்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வளைத்து, தவெக ஆட்சியைக் கவிழ்க்க, பலவீனப்படுத்த திரைமறைவில் மாபெரும் ‘ஆபரேஷன்’ தொடங்கப்பட்டது.
தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலர், தங்களைக் கட்சி தாவ வைப்பதற்காகப் பேசப்பட்ட தொகையில் பல கோடிகளை “முன்பணமாக” கைநீட்டி வாங்கியுள்ளனர். இந்த ரகசியப் பணப் பரிமாற்றத்தை உளவுத்துறை மோப்பம் பிடித்து, காவல்துறைக்கு ரகசிய சிக்னல் கொடுத்தது. களமிறங்கிய போலீஸ், சம்பந்தப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை ரகசிய இடத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தியது. விசாரணையின் கொடூர முனையில் இருந்து தப்ப முடியாத எம்.எல்.ஏ-க்கள், “ஆமாம், நாங்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்கியது உண்மைதான்” என்று வாக்குமூலம் கொடுத்து அப்படியே ஒப்புக்கொண்டுள்ளனர்.
திணறும் தவெக தலைமை!
இந்த சதியின் பின்னணியில் மாஸ்டர் பிரைனாகச் செயல்பட்டது யார் என்று காவல்துறை தோண்டத் தொடங்கிய போது, விழுந்தது ஆகச்சிறந்த அரசியல் விக்கெட். இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு, இந்த அரசியல் ஆப்பரேஷன் அரங்கேறியுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய சில முக்கிய நபர்கள் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிய எம்.எல்.ஏ-க்கள்…சிக்கிய இடைத்தரகர்கள்
பணம் வாங்கிய எம்.எல்.ஏ-க்கள் கையும் களவுமாகச் சிக்கியிருந்தாலும், அவர்கள் மீது தவெக அரசு நேரடியாகத் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத தர்மசங்கடத்தில் உள்ளது. ஏனெனில், 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களை ஒரே நேரத்தில் சஸ்பெண்ட் செய்தாலோ அல்லது கைது செய்தாலோ, அது தற்போதைய தவெக ஆட்சியின் பெரும்பான்மைக்கு வேட்டு வைத்து, ஆட்சிக்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கிவிடும்.
இதனால், “எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்போம்; கொடுத்தவர்களைக் கைது செய்வோம்” என்ற வியூகத்தை தவெக தலைமை கையில் எடுத்துள்ளது. பணம் வாங்கிய எம்.எல்.ஏ-க்களை எச்சரித்துவிட்டு, அவர்களுக்குப் வலைவீசிப் பணம் கொடுத்து பேரம் பேசிய இடைத்தரகர்களையும், அரசியல் புள்ளிகளையும் குறிவைத்து காவல்துறை தற்போது தனது வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.
தூய அரசியலின் முகமூடி கிழிந்ததா?
“மாற்றம்…” என்று முழங்கி ஆட்சியைப் பிடித்த தவெக, பதவியேற்ற சில மாதங்களிலேயே ‘குதிரை பேரப் புகாரில்’ சிக்கியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் ஐந்து வருட ஆட்சிக் காலம் முழுமையாக இருக்கும் போதே, அதற்குள் கோடிகளை வாங்கிக் கொண்டு கட்சி தாவத் துணியும் எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு, முதலமைச்சர் விஜய் எப்படி தூய்மையான ஆட்சியைத் தரப் போகிறார் என்ற காரசாரமான கேள்விகள் எழுகின்றன.
மறுபுறம், திமுக-வின் இந்த அதிரடி அரசியல் ஆட்டத்தை தவெக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? தவெக-வின் கோட்டையைத் தகர்க்க நினைக்கும் செந்தில் பாலாஜியின் வியூகத்தை உடைக்க, முதல்வர் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழக அரசியல் களம் அடுத்த சில நாட்களுக்கு தகிக்கும் நெருப்பு வளையமாகவே இருக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

[…] […]
[…] […]
[…] […]