தமிழகத்தில் “ஊழல் ஒழிப்பே எங்கள் தாரக மந்திரம்” என்று முழங்கி ஆட்சியைப் பிடித்த தவெக அரசுக்கு, அதன் சொந்தக் கட்சி நிர்வாகிகள் மூலமாகவே ஊழல் உருவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நூதன முறையில் மிகப்பெரிய அளவில் லஞ்ச முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டச் செயலாளர்களின் வசூல் வேட்டை?
பொதுவாக ஆட்சி மாறும்போது அரசு வழக்கறிஞர்கள் மாறுவது வழக்கம் தான். ஆனால், இந்த முறை தவெக மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் பேரிலேயே இந்த வழக்கறிஞர்கள் நியமனங்கள் முழுமையாக நடைபெற்றுள்ளதாகக் பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெறுவதற்காக, தகுதியின் அடிப்படையில் அல்லாமல், பணத்தின் அடிப்படையில் ₹25 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சத் தொகை நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் வரை கைமாறியுள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டுப் பங்கீடு?
இந்த வசூல் வேட்டை ஏதோ ஒரு தனி நபரால் நடத்தப்பட்டது அல்ல. இதன் பின்னணியில் பெரும் நெட்வொர்க் இயங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் தவெக-வின் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருப்பவர்கள் கூட்டுச் சேர்ந்து தான் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர் என்றும், வசூலான தொகையை மாவட்ட வாரியாகப் பங்கிட்டுக் கொண்டதாகவும் உள்குத்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகம் சிவந்த முதலமைச்சர் விஜய்
இந்த விவகாரத்தில் தவெக தலைமைக்கு மிகப்பாரிய தலைவலியை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்த முறைகேட்டை எதிர்க்கட்சியினர் யாரும் தோண்டி எடுக்கவில்லை. தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இந்த நியமனங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று பொதுவெளியில் நாறுவதற்கு முன்னரே, உளவுத்துறை மூலமாக கட்சித் தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. “ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்” என்று மேடைகளில் பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சொந்தக் கட்சி மாசெ-க்களும் அமைச்சர்களும் இப்படி ₹80 கோடிக்கு கல்லா கட்டிய விபரத்தைக் கேட்டு முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தியடைந்து முகம் சிவந்துள்ளார்.
கட்சிக்குள் வெடித்த விவாதம்
“ஊழல் ஒழிப்பை அரசு அதிகாரிகளிடம் இருந்து தொடங்குவதை விட, நமது கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும்” என தவெக-வின் தொண்டர்கள் மத்தியிலேயே இப்போது காரசாரமான விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

[…] […]
[…] […]