https://republictn.com/

தமிழகத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனைக்கு எதிராக காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தர்மபுரி ராஜகோபால் பேருந்து நிலையப் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

லாட்டரி சீட்டு விற்பனையை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் காலமாக பல பகுதிகளில் ஆன்லைன் மற்றும் மறைமுக வழிகளில் சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சட்டவிரோத லாட்டரி விற்பனை மீண்டும் தலைதூக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் அரசியல் வட்டாரங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசுக்கு எதிரான அரசியல் பிரச்சினையாக முன்வைத்து வருகின்றன.

அண்மையில் சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்றதாகக் கூறி தவெக நிர்வாகி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையிலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும், “மக்களின் பணத்தைச் சூறையாடவோ அல்லது முறைகேடுகளில் ஈடுபடவோ யாரையும் அனுமதிக்க மாட்டோம். கடந்த காலத்தில் தவறு செய்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கஞ்சா, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சூதாட்டக் கும்பல்களுக்கு எதிராக காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் சட்டவிரோத லாட்டரி மற்றும் ஆன்லைன் சூதாட்ட வலையமைப்புகளை முழுமையாக ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago