கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளி திறப்பு மேலும் மூன்று நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை காலம் அதிகபட்சமாக 49 நாட்களாக நீடித்தது.
நீண்ட கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு அரசு பள்ளி வளாகங்கள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் வகுப்பறைகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
