புதிதாக ஆட்சியமைத்துள்ள தவெக தனது அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்கியுள்ளது. தவெக-வின் இந்தத் திடீர் ‘சமூக நீதி’ நகர்வு, தங்களைச் சமூக நீதியின் காவலர்களாக முன்னிறுத்தி வரும் திமுக-வுக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சவாலை எதிர்கொள்ளவும், இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் திமுக ஒரு மாபெரும் உள்கட்சி சீரமைப்பிற்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான ‘பொதுச்செயலாளர்’ பதவியைப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கத் திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தற்போது மூத்த தலைவர் துரைமுருகன் வசம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு, கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், டெல்லி அரசியல் வரை நன்கு அறியப்பட்டவருமான ஆ.ராசாவைக் கொண்டு வரப் பெரும்பான்மையான வாய்ப்புகள் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமன்றி, கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கியப் பொறுப்புகளிலும் பட்டியலினத் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் தவெக ஏற்படுத்திய அதிரடித் திருப்பம், திமுகவை அதன் உள்கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. தவெக-வின் பட்டியலினப் பிரதிநிதித்துவத்திற்குப் போட்டியாக, திமுகவும் தனது முக்கியப் பதவிகளில் பட்டியலினத்தோருக்கு முக்கியத்துவம் அளிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். திராவிடப் பாரம்பரியமிக்க திமுகவில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்தால், அது தமிழக அரசியலில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
