https://republictn.com/

புதிய, ஆடம்பர வாகனங்களை வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ‘ஃபேன்சி’ எண்களைப் பெறுவதற்குப் பெரும் தொகையைச் செலவிடுவதும், அதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களை நாடுவதும் நீண்டகாலப் பழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையில் பொதுமக்கள் சந்திக்கும் இழுபறிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து சீனியர் பத்திரிகையாளர் திருச்சி ஷானு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அண்மையில் விரிவாகப் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு வெளியாகி ஏழே நாட்களில், புதிய தவெக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அவர்கள் இந்த விவகாரத்தில் காட்டிய அதிரடிச் செயல்பாடும், இடைத்தரகர்களை முடக்கிய விதமும் தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

இது பற்றி பத்திரிகையாளர் திருச்சி ஷானு தனது மற்றொரு முகநூல் பதிவில், ”வாழ்த்துகள் அமைச்சரே… வாகனங்களுக்கு பேன்சி நம்பர்கள் கிடைக்கவில்லை என்கிற நம்முடைய பதிவு வந்த ஏழாவது நாள் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சரின் அலுவலக வாசலில் இருந்து அழைத்தார் ஆனந்த் என்கிற நண்பர். பல வருடங்களுக்கு முன்பு ஶ்ரீரங்கத்தில் வசித்த இவர் தற்போது சென்னையில் இருக்கிறார்.

முகநூலில் என்னுடைய பதிவை பார்த்த அவருக்கும் இதே பிரச்சனை இருந்திருக்கிறது. அவர் போன நேரத்தில் இந்த விஷயம் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கவனத்திற்கு போயிருக்கிறது. அங்கே நடந்ததை ஆனந்த் சொல்கிறார்…
“வெளியில வந்துட்டு கூட்டம் ரொம்ப அதிகமா இருந்துச்சு… PA எல்லாம் யாரும் கிடையாது. அமைச்சரே வெளிய வந்து நின்னுகிட்டு ‘யார் யாரெல்லாம் பேன்சி நம்பர் சம்பந்தமா வந்திருக்காங்க’ ன்னு கேட்டு, எல்லாரையும் பர்சனலா அவரே அடையாளங்களை செக் பண்ணி ‘யாருக்காவது லஞ்சம் கொடுத்திருக்கீங்களா? யாருக்கும் அதெல்லாம் கொடுக்காதீங்க… யாரும் ஒரு பைசா கொடுக்க கூடாது.

கவர்மெண்ட்க்கு நீங்க கட்டுற பீஸ் மட்டும் தான் கொடுக்கணும். வேற பைசா எதுவும் யாருக்கும் கொடுக்காதீங்க’ அப்படின்னு சொல்லிட்டு எல்லாருக்கும் கையெழுத்து போட்டு கொடுத்தாரு. ஒருத்தர் பேன்சி நம்பர் வாங்கி கொடுக்கிற புரோக்கர் போல இருக்கு. ஒரு நம்பருக்கு தகவல் கரெக்டா சொன்னாரு. அதுக்கு அமைச்சர் கையெழுத்து போட்டு கொடுத்தார். இன்னொரு நம்பருக்கு கையெழுத்து கேட்டார் அந்த நபர். ‘இன்னொரு நம்பரா…? பேரு கரெக்டா சொல்லுங்க’ அப்படின்னாரு அமைச்சர். ‘கசின் பிரதர்’னு சொல்லவும், ‘அப்படின்னா இந்த பைல் கையெழுத்து ஆகாது’ அப்படின்னு தூக்கி உள்ள வச்சுட்டாரு.

‘உன் கசின் பிரதர் நேரா வர சொல்லு’ன்னு சொல்லிட்டாரு. இடைத்தரகர்களை கட் பண்றதுக்காக ஓனர் நேரா வரணும்னு சொல்லிட்டாங்க. ‘இதுக்கு யாராவது லஞ்சம் கேட்டா நேரா என் ரூம் கதவ தட்டி சொல்லிட்டு போங்க. உங்களை பத்தின தகவல்கள் ரகசியமா நான் பாத்துக்குறேன்’ என்று சொன்னார். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதிமுக, திமுக அமைச்சர்களை பார்க்கவே முடியாது. இந்த அமைச்சரோ நேரா வந்து வெளியே நின்னு நேரடியா சரி பார்த்து கையெழுத்து போட்டு தருவதெல்லாம் கனவில் கூட நடக்காது” என்று சொன்னார்.

‘என் கூட போட்டோ எடுத்து நீங்க என்ன செய்யப் போறீங்க ? எனக்கு சால்வை எல்லாம் போட வேண்டாம்’ என்று போக்குவரத்து துறை அமைச்சர் சொல்றது ஆச்சரியமா இருந்தது. ‘இது தொடர்ந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்’ என்று அமைச்சரிடம் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்டார். ‘இப்படி தாமதமாகி போனதற்கு ரொம்ப சாரி’ என்றார். ‘பரவால்ல சார்…’ என்று சொன்னேன். ராத்திரி எட்டு மணி வரைக்கும் இருந்து பெண்டிங் இருந்த பைல் எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டு கொடுத்தது நல்ல விஷயம்” என்றார்.

புதிதாக அமைச்சர் பதவி ஏற்ற நேரத்தில் இது எல்லாம் கவனிக்க முடியாமல் இருந்தது பரவாயில்லை. கவனத்துக்கு வந்ததும் சரி செய்தது நல்லது. இனிவரும் காலங்களிலும் இதுவே தொடர்ந்தால் நல்லது. நாமும் வாழ்த்துவோம்… ஆனந்த் தன்னுடைய புது காரை இன்று பூஜை போட்டு எடுத்துக் கொண்டு வந்து விட்டார்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago