அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ-பதவியை ராஜினாமா செய்துள்ள விராலிமலை விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயபாஸ்கரின் முந்தைய பின்னணி குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவில், ”இவர் ஒரு சரித்திர பதிவேட்டு குற்றவாளி எனச் சான்றிதழ் பெறத் தகுதியானவர். ஆனால், ரொம்ப ஸ்மார்ட்டானவர். ஆகத் திறமை வாய்ந்த ஒரு அமைச்சர், எப்போதும் புண் சிரிப்பு, பணிவு, கனிவு என்பது போல தோற்றம் காட்டி வளைய வருவார். ஆனால், இயல்பிலே அவர் ஊழல்முறைகேடுகளில் கொடி கட்டிப் பறப்பவர். அதாவது மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைப்பூச்சி போன்றவர்.
சுகாதாரப் பணியாளர்களான செவிலியர்கள் பெறுவதோ அடிமாட்டுச் சம்பளம். அந்தச் சம்பளத்திலும் கமிஷன் பிடுங்க தனியார் நிறுவனம் மூலம் திட்டம் தீட்டி அம்பலப்பட்டவர் தான் விஜயபாஸ்கர். 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், புகார்தாரர் ஒருவரிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது சிபி-சிஐடி வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதை திமுக அரசை சரிகட்டி சமாளித்தார்!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது (2016-2021), வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மற்றும் இவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் இன்று வரை நடவடிக்கையின்றி தப்பித்தார் என்றால், திமுகவிலும் மிக நல்ல தொடர்பில் இருந்தார்.
இளைஞர்களை சீரழிக்கும் குட்கா விற்பனையை அனுமதித்தற்காக 39.91 கோடி லஞ்சம் பெற்றவர். 2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நவம்பர் மாதத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ஒரு ரெய்டு நடந்தது.
அவரது இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிய வகையில் கையூட்டாக விஜயபாஸ்கருக்கு ரூ.5.16 கோடி கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூ. 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாக கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூ.1.28 கோடி லஞ்சம் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டது.
எனில், அதற்கு முன்னும், பின்னுமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார். அந்த வகையில் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியே இந்த வில்லங்க விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப் பெரிய கோடீஸ்வராக தற்போது விஜயபாஸ்கர் உயர்ந்துள்ளதற்கு பின்னணியில் எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் மட்டுமின்றி, இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருபவர்.
ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 2,000 முதல் 5,000 வரை தந்து எம்.எல்.ஏ ஆனவரான விஜயபாஸ்கர் தற்போது ராஜுனாமா செய்திருக்கிறார் என்றால், இழந்த பணத்தைவிட அதிக ஆதாயம் கருதியே அடுத்தகட்ட நகர்வை எடுத்திருப்பார் என்பது உறுதி. இவரை தற்போது நேர்மையான ஆட்சி தர ஆர்வம் காட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கக் கூடாது. அப்படி இணைத்தால், அது தமிழக தற்கொலைக் கழகமாகிவிடும்” எனக் கூறியுள்ளார்.
