ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் சாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான குமார், தன் மகன் பகீரத் சாய் மீடது 17 வயது சிறுமி ஒருவர் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக சாயை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
25 வயதான அவர் மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டம், பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது எக்ஸ்தளப்பதிவில், ”சட்டம், நீதித்துறைக்கு மிகுந்த மரியாதையுடன், இன்று என் மகன் பண்டி பாகீரத் விசாரணைக்காக எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தெலங்கானா காவல்துறையிடம் ஆஜரானார். இதை நான் முன்பும் கூறியுள்ளேன். அது என் சொந்த மகனாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, எங்களிடம் உள்ள ஆதாரங்களை அவர்கள் முன் வைத்த பிறகு, இந்த விவகாரம் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் உரிய முறையில் கையாளப்படும் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதிலும், நீதித்துறையை மதிப்பதிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த வாரம் உத்தரவுகள் எதிர்பார்க்கப்பட்டாலும், எங்கள் சட்டக் குழுவின் ஆலோசனையையும் மீறி, விசாரணைக்கு ஒத்துழைப்பதில் எங்கள் தரப்பில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது என்று நான் உணர்ந்தேன். நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீதி தாமதமாகலாம், ஆனால் மறுக்கப்படாது,” என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் சாய்க்கு முன் ஜாமீன் வழங்கவில்லை. இந்த வழக்கில் புகார்தாரராக உள்ள பாதிக்கப்பட்டவரின் தாய், தனது மகள் கடந்த ஆண்டு சாயுடன் உறவில் ஈடுபட்டதாகவும், அது சுமூகமாக இருந்ததாகவும் கூறியதாக சாயின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்த்தார்.
இந்த நிலையில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கத் தான் விரும்பவில்லை என்று நீதிபதி டி. மாதவி தேவி கூறினார்.
இந்த வழக்கு ஒரு “ஹனிடிராப், மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி” என்று சாய் கூறி வருகிறார். அந்தப் பெண்ணும் அவளது பெற்றோரும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும், 5 கோடி ரூபாய் கேட்பதாகவும் கூறி, தான் முன்னதாக காவல்துறையை அணுகியதாக அவர் கூறினார்.
குமாரும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவை எதிர்க்கட்சியால் பரப்பப்படும் “பொய்ப் பிரச்சாரம்” என்று கூறினார்.
