விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மூன்று கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை காணவும், அதன் நலனை விசாரிக்கவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வீடு தேடிச் சென்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இருஞ்சிறை அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (50). விவசாயியான இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கார்மேகம் வளர்த்து வந்த கர்ப்பமான ஆடு ஒன்று நேற்று தனது முதல் பிரசவத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை ஈன்றது. ஆரம்பத்தில் குட்டியை சாதாரணமாக கவனித்த குடும்பத்தினர், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த ஆட்டுக்குட்டி மூன்று கால்களுடன் பிறந்திருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மூன்று கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கார்மேகம் வீட்டிற்கு நேரில் சென்று அந்த அதிசய ஆட்டுக்குட்டியையும், அதனை ஈன்ற தாய் ஆட்டையும் பார்வையிட்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த அரிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
