தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் தற்போதைய தவெக அரசின் முக்கிய இலக்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு நேர்மாறான ஒரு அதிர்ச்சிச் செய்தி கோட்டை வட்டாரத்தை உலுக்கியுள்ளது. தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, ஒரே மாதத்தில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தக்கவைக்க முடியாமல் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குத் தாரை வார்த்துள்ளார் என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அமைச்சர் கீர்த்தனா சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் அழைப்பு விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேலி, சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க முறையான உத்திகள் தேவைப்படும் நிலையில், இத்தகைய மேலோட்டமான அணுகுமுறையால் தமிழகத்திற்கு வரவேண்டிய நான்கு முக்கியப் பெருநிறுவனங்களின் திட்டங்கள் தற்போது ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்துள்ளன.
கைநழுவிப் போன மெகா முதலீடுகள்:
ஹ்வாசுங் (Hwaseung): தூத்துக்குடியில் அமையவிருந்த தென் கொரிய காலணி உற்பத்தி ஆலையின் ₹1,720 கோடி முதலீடு, அப்படியே ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield): 1955-க்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வெளியே இந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் பெரிய விரிவாக்கமான ₹2,200 – ₹2,500 கோடி மதிப்பிலான திட்டம் ஆந்திரா வசம் சென்றுள்ளது.
ஹிண்டால்கோ (Hindalco): ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலிக்கான (Supply Chain) ஆதித்யா பிர்லா குழுமத்தின் ₹586 கோடி அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் ஆலையும் ஆந்திராவின் குப்பத்திற்குச் சென்றுவிட்டது.
பிரீமியர் எனர்ஜிஸ் (Premier Energies): சூரியசக்தி மின்கலத் தயாரிப்பிற்கான ₹1,700 கோடி மதிப்பிலான திட்டமும் ஆந்திராவின் நாயுடுபேட்டைக்குக் கைமாறியுள்ளது.
தொழில்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில், தற்போது முதலீடுகள் வெளியேறுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, அதிகாரத்துவத் தாமதங்கள், அண்டை மாநிலமான ஆந்திராவின் தீவிரமான தொழில் கொள்கை போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ‘ரீல்ஸ்’ மோகத்தை விடுத்து, எதார்த்தமான தொழில் சூழலையும், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளையும் உறுதி செய்யாவிட்டால், தமிழகம் தொழில் துறையில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
