உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், அபராதம் விதிக்க முயன்ற போக்குவரத்து போலீஸாரை நிறுத்தாமல், காரின் முன்பகுதியான பானெட்டில் தரதரவென இழுத்துச் சென்ற ஓட்டுநரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள ராவத்பூர் கிராசிங் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு கார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விதிமீறலுக்காக ‘சலான்’ எனப்படும் அபராதம் விதிக்க, போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் திடீரென வேகமாக இயக்கியுள்ளார்.
கார் நிற்காமல் வேகமாகச் சென்றதால், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் போக்குவரத்து போலீஸ் அதிகாரி காரின் பானெட்டை கைகளால் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். போலீஸார் பானெட்டில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சில தூரம் வரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆபத்தான சம்பவம் தொடர்பான வீடியோ, காரின் உள்ளே இருந்து, ஓட்டுநரின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது. காரின் முன் கண்ணாடி அருகே, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போக்குவரத்து போலீஸ் அதிகாரி தொங்கிக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. அவரது கையில் மின்னணு அபராதம் விதிக்கும் ‘இ-சலான்’ கருவியும் இருந்துள்ளது.
காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த போலீஸ் அதிகாரி பலமுறை கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. சாலையில் அரசுப் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருந்த நிலையிலும், ஓட்டுநர் எதையும் பொருட்படுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
போலீஸாரை பானெட்டில் ஏற்றியபடி கார் நீண்ட தூரம் ஆபத்தான முறையில் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் அந்தக் கார் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, காரில் சிக்கியிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி மீட்கப்பட்டார்.
கார் நிறுத்தப்பட்டதும், ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அரசு ஊழியரை அவரது பணியைச் செய்யவிடாமல் தடுத்தது, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் கான்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கார் ஓட்டுநர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கார் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநரின் முகவரியைக் கண்டறிந்துள்ள போலீஸார், அவரைத் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை முயற்சி மற்றும் அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
