இன்றைய அவசர உலகத்தில் 18 வயது இளைஞர்களிலிருந்து 60 வயது பெரியவர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தும் ஒரு சொல் என்ன தெரியுமா? அது தான் “ஹார்ட் அட்டாக்”.
நேற்று வரை நன்றாக இருந்தவர், இன்று என்ன ஆனார் என்று நம்மைச் சுற்றியவர்கள் அடிக்கடி கேட்கும் நிலை உருவாகி வருகிறது. ஹார்ட் அட்டாக் ஏன் ஏற்படுகிறது? அதற்கு முன் உடல் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?
முதலில் ஹார்ட் அட்டாக் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். நம் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து சுழற்சி செய்யும் முக்கிய உறுப்பு இதயம். இதயத்திற்கே இரத்தமும் ஆக்சிஜனும் செல்லும் வகையில் சில இரத்தக் குழாய்கள் உள்ளன. அவற்றை “கரோனரி தமனிகள்” என்று அழைக்கிறோம்.
நாம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் காரணமாக, அந்த இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதையே ஹார்ட் அட்டாக் என்று கூறுகிறோம்.
இதற்கான முக்கிய காரணிகள் என்னவென்றால், தவறான உணவுப் பழக்கம், ஜங்க் ஃபுட், அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஆகும். அதோடு புகைப்பழக்கம், மது பழக்கம் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை ஆகியவையும் முக்கிய காரணங்களாகும். நீண்ட நேரம் லேப்டாப் அல்லது மொபைல் முன் அமர்ந்திருப்பதும், உடல் இயக்கம் இல்லாமைவும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஹார்ட் அட்டாக் திடீரென ஏற்படுமா என்று கேள்வி எழலாம். ஆனால் அது பெரும்பாலும் முன்கூட்டியே சில எச்சரிக்கை அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தும். அவற்றை நாம் சாதாரணமாக கேஸ், அசிடிட்டி போன்றதாக எண்ணி அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
அந்த அறிகுறிகள் என்னவென்றால், நெஞ்சின் நடுப்பகுதி அல்லது இடது பக்கத்தில் பெரிய கல் வைத்து அழுத்துவது போன்ற கடுமையான வலி அல்லது பாரம் ஏற்படும். இந்த வலி நெஞ்சில் மட்டும் இல்லாமல் இடது கை, தாடை, கழுத்து மற்றும் முதுகு பகுதிகளுக்கும் பரவலாம்.
மேலும் எந்த வேலை செய்யாமல் இருந்தபோதும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும். காற்று போதவில்லை போன்ற உணர்வு இருக்கும். ஏர் கண்டிஷன் அறையிலிருந்தாலும் உடல் முழுவதும் வியர்வை அதிகமாக சிந்தலாம். அதோடு காரணமின்றி தலைசுற்றல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவதும் இதய நோயின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்கு சென்று ECG பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் முதலாவது ஒரு மணி நேரமே மிகவும் முக்கியமான “கோல்டன் ஹவர்” என அழைக்கப்படுகிறது.
“வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கேற்ப, ஆரோக்கியமான உணவு பழக்கம், தினசரி சிறிய உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைத்து வாழ்வதன் மூலம் இதய நோய் அபாயத்தை பெருமளவு தவிர்க்கலாம்.
