சட்டமன்ற தேர்தலில் திமுக சந்தித்த தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ‘தோல்வி ஆராய்வுக் குழு’ தனது விரிவான அறிக்கையைக் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட இந்த அதிரடி அறிக்கையில், திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக 6 அமைச்சர்கள், முக்கியப் புள்ளிகள் மீது மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் பரபரப்பு புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட 3,000 பக்கங்கள் கொண்ட அந்தப் பெரு அறிக்கையில், அதிகப்படியான குற்றச்சாட்டுகளும் புகார்களும் சென்னையை மையப்படுத்தியே பதிவாகியுள்ளன. குறிப்பாக, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் ஆகிய இருவர் மீதுதான் கூடுதலான புகார்கள் குவிந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சென்னைக்கு வெளியேயும் கட்சியின் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது தமிழகம் முழுவதிலும் உள்ள அடிமட்ட நிர்வாகிகள் தங்களின் அதிருப்தியையும் குற்றச்சாட்டுகளையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய நபர்களான முன்னாள் அமைச்சர்களான பி.மூர்த்தி, எ.வ. வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா
ஆகிய இந்த ஆறு பேரின் செயல்பாடுகளும், தேர்தல் கையாளுமைகளுமே கட்சியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக இந்த ரிப்போர்ட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய புகார்கள் ஆவணப்படுத்தப்பட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்ட போதிலும், கட்சித் தலைமை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
புகாருக்குள்ளான அமைச்சர்களுடன் கட்சித் தலைமை இன்னமும் வழக்கம் போல இணக்கம் காட்டி வருவதைப் பார்க்கும்போது, பெரிய அளவில் அதிரடி மாற்றங்களோ அல்லது ஒழுங்கு நடவடிக்கைகளோ இருக்காது என்றே திமுகவின் உள்விவரங்கள் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கட்சித் தலைமையின் இந்த மெத்தனப் போக்கு, தோல்வி குறித்து ஆராய்ந்த குழுவினருக்கே தற்பொழுது ஒரு பெரிய சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
